Publish Date: Mon, 24 Aug 2020 (08:12 IST)
Updated Date: Mon, 24 Aug 2020 (08:14 IST)
தமிழகத்தில் இன்று முதல் பிளஸ் 1 மாணவர் சேர்க்கை
கொரோனா வைரஸ் காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் நான்கு மாதங்களுக்கு மேல் பள்ளிகள் மூடப்பட்டு உள்ளது என்பதும் கடந்த கல்வியாண்டில் அனைத்து தேர்வுகளும் ரத்து செய்யப்பட்டது என்பதும் தெரிந்ததே
இந்த நிலையில் அடுத்த கல்வியாண்டுக்கான பள்ளிகள் திறப்பது எப்போது என்பது குறித்து மத்திய மாநில அரசுகள் ஆலோசனை செய்து வருகின்றன. இருப்பினும் சமீபத்தில் ஒன்றாம் வகுப்பு, ஆறாம் வகுப்பு, ஒன்பதாம் வகுப்பு மாணவர்கள் புதிதாகச் சேர்க்கப்பட்டனர்
இந்த நிலையில் இன்று முதல் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் பதினோராம் வகுப்புக்கு மாணவர் சேர்க்கை தொடங்குகிறது என தமிழக அரசு தெரிவித்துள்ளது. இன்று காலை முதல் அனைத்து பள்ளிகளிலும் பிளஸ் 1 மாணவர் சேர்க்கை தொடங்குகிறது என்றும் அனைத்து பள்ளிகளிலும் உள்ள நிர்வாகிகள் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளையும் அரசின் வழிகாட்டு நெறி முறைகளையும் பின்பற்ற வேண்டும் என்று கல்வித்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது
மேலும் மாணவர் சேர்க்கைக்கு வரும் மாணவர்கள் மாற்றுச்சான்றிதழ், தற்காலிக மதிப்பெண் சான்றிதழ்களை கொண்டு வர வேண்டும் என்றும், இட ஒதுக்கீடு அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடைபெற வேண்டும் என்றும் கல்வித்துறை அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர். இதனை அடுத்து பிளஸ் 1 வகுப்பில் சேர்வதற்கு அரசு பள்ளிகளில் மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் இன்று காலை முதலே குவிந்து உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது