Publish Date: Wed, 19 Dec 2018 (09:50 IST)
Updated Date: Wed, 19 Dec 2018 (09:53 IST)
தற்போதைய நிலையில் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக சென்றால் ஆயிரக்கணக்கில் லட்சக்கணக்கில் செலவாகும் நிலையில் வெறும் ரூ.5 மட்டுமே பெற்று நோயாளிகளுக்கு கடந்த 45 ஆண்டுகளாக மருத்துவ சேவை செய்தவர் டாக்டர் ஜெயசந்திரன்.
சென்னை ராயபுரம் பகுதியில் கடந்த 45 ஆண்டுகளாக ஐந்து ரூபாய் மட்டுமே கட்டணமாகப் பெற்று ஏழை நோயாளிகளுக்கு மருத்துவம் பார்த்து வந்த சென்னை ராயபுரம் ஐந்து ரூபாய் மருத்துவர் ஜெயசந்திரன் இன்று காலமானார் அவருக்கு வயது 71. மருத்துவர் ஜெயசந்திரனின் மரணம் ராயபுரம் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த 1971ஆம் ஆண்டு கிளினிக்கை தொடங்கிய ஜெயச்சந்திரன் ஆரம்பத்தில் ரூ.2 மட்டுமே கட்டணம் பெற்று வந்தார். போகப்போக ஐந்து ரூபாய் கட்டணம் பெற்ற இவரிடம் பெரும்பாலும் ஏழை எளிய மக்களே சிகிச்சை பெற்று வந்தனர். நோயாளிகளிடம் இவர் கனிவுடன் பேசுவதால் பாதி நோய் இவரது பேச்சிலேயே குணமாகிவிடும் என்றும் அந்த பகுதி மக்கள் கூறினர்.
தற்போது ஐந்து ரூபாய்க்கு எந்த பொருளும் வாங்க முடியாத அளவுக்கு விலைவாசி உயர்ந்துள்ள நிலையில் ஐந்து ரூபாய்க்கு மருத்துவம் பார்த்து பொதுமக்களிடம் நற்பெயர் பெற்ற இவரது ஆத்மா சாந்தியடையட்டும்