Publish Date: Wed, 25 Nov 2020 (13:28 IST)
Updated Date: Wed, 25 Nov 2020 (13:33 IST)
வங்க கடலில் உருவாகியுள்ள நிவர் புயல் கரையை கடக்க உள்ள நிலையில் கடலுக்குள் சென்றிருந்த மீனவர்கள் தட்டுதடுமாறி கரை ஒதுங்கிய வீடியோ வைரலாகியுள்ளது.
வங்க கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் நிவர் புயலாக உருமாறியுள்ளது. தீவிர புயலாக உள்ள நிவர் கரையை கடக்கும் முன்னர் அதி தீவிர புயலாக மாறும் என கூறப்பட்டுள்ளது. இன்று நள்ளிரவு தொடங்கி விடியும் வரை புயல் கரையை கடக்கும் என கூறப்பட்டுள்ளது.
இந்நிலையில் மீனவர்கள் கடலுக்குள் செல்ல வேண்டாம் என கடந்த நான்கு நாட்களுக்கு முன்னதாகவே எச்சரிக்கப்பட்ட நிலையில், கடலில் உள்ள மீனவர்களையும் கரைக்கு திரும்ப சொல்லி எச்சரிக்கை செய்தி அனுப்பப்பட்டது. ஆனாலும் நாகப்பட்டிணம், காரைக்கால் மற்றும் சென்னையில் இருந்து கடலுக்குள் சென்ற சில மீனவர்கள் இன்னமும் திரும்ப வரவில்லை என கூறப்பட்டு வந்தது.
இந்நிலையில் நேற்று சில மீனவர்கள் பத்திரமாக கரைக்கு வந்து சேர்ந்தனர். இன்று இரவு புயல் கரையை கடக்க உள்ள நிலையில் மேலும் சில மீனவர்கள் சென்னை காசிமேடு கடற்கரை அருகே படகில் தள்ளாடியவாறு கரை ஒதுங்கியுள்ளனர். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றது.