Publish Date: Wed, 31 May 2017 (15:25 IST)
Updated Date: Wed, 31 May 2017 (15:28 IST)
சென்னை தி. நகரில் உள்ள சென்னை சில்க்ஸ் கட்டிடத்தில் ஏற்பட்டுள்ள தீயை அணைக்க முடியாமல் தீயணைப்பு வீரர்கள் திணறி வருகின்றனர்.
சென்னை தி.நகரில் உள்ள சென்னை சில்க்ஸ் கட்டிடத்தில் இன்று காலை 4 மணியளிவில் தீ பற்றியது. முதலில் அடித்தளத்தில் பற்றிய தீ, படிப்படியாக மற்ற தளங்களுக்கும் பரவியது. தற்போது அந்த கட்டிடத்தில் உள்ள 7 தளங்கலிலும் தீ பற்றி எரிகிறது.
ஒரே புகை மூட்டமாக இருப்பதால், தீயணைப்பு வீரர்களால் உள்ளே சென்று தீயை அணைக்க முடியவில்லை. எனவே, ரசாயணப் பவுடர் மூலம் தீயை அணைக்க முயன்றனர். அதில் சற்று தீயின் தாக்கம் குறைந்தாலும், கடையின் உள்ளே ஏராளமான துணிகள் இருப்பதால், தீ மேலும் பரவி, கொளுந்து விட்டு எரிகிறது.
தீயை அணைப்பதற்கு இதுவரை 50 லாரி தண்ணீரை தீயணைப்பு வீரர்கள் பயன்படுத்தியுள்ளனர். இந்நிலையில் தண்ணீர் தட்டுப்பாடும் ஏற்பட்டுள்ளது. இருந்தாலும் எப்படியாவது மாலைக்குள் தீயை அணைத்து விடுவோம் என தீயணைப்பு வீரர்கள் கூறி வருகின்றனர்.
இந்த தீ விபத்தின் காரணமாக, இந்த பகுதி முழுவதும் அபாயகரமான பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து 10 மணி நேரம் தீ எரிந்து வருவதால் அந்த பகுதி முழுவதும் புகை மண்டலமாக காட்சியளிக்கிறது. அருகிலிருப்பவர்கள் பாதுகாப்பான இடத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.