Publish Date: Thu, 20 Sep 2018 (16:01 IST)
Updated Date: Thu, 20 Sep 2018 (16:04 IST)
சென்னை வள்ளுவர் கோட்டத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் பேசிய கருணாஸ் கோபத்தில் ஆக்ரோஷமாக பேசினார்.
தி.நகர் துணை கமிஷனர் அரவிந்தை கடுமையாக விமர்சனம் செய்தார். சட்டையை கழற்றி வைத்து விட்டு வா. ஒத்தைக்கு ஒத்தை மோதிப்பார்ப்போம் என சவால் விட்டார். அதேபோல், முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியையும் அவர் கடுமையாக விமர்சித்தார்.
சசிகலா இல்லையென்றால் இந்த ஆட்சி அமைந்திருக்காது. கூவத்தூர் விடுதியை பரிந்துரை செய்ததே நான்தான். நாங்கதான் கவுண்டரான எடப்பாடி பழனிச்சாமியை முதல்வர் ஆக்கினோம். கூவத்தூரில் பலரும் தினகரனின் காலில் விழுந்தனர். எடப்பாடி பழனிச்சாமியும் தினகரன் காலில் விழுந்தார். அதை நானே பார்த்தேன். நான் அடித்துவிடுவேன் என முதல்வரே பயப்படுகிறார்.
எந்த ஜாதிக்காரனும் மூன்று முறை முதல்வர் ஆகவில்லை. எங்கள் தேவர் இனம்தான் மூன்று முறை முதல்வர் பதவியை வகித்தது என தனது ஜாதியை முன்னிறுத்தி அவர் பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியது.
எனவே, யாரையேனும் புண்படும்படி பேசியிருந்தால் வருத்தம் தெரிவிப்பதாகவும், இனிமேல் அப்படி பேசமாட்டேன் எனவும் அவர் கூறியிருந்தார்.
இந்நிலையில் எம்.எல்.ஏ கருணாஸின் மீது சென்னை நுங்கம்பாக்கம் காவல் நிலையத்தில் அவதூறாக பேசுவது, மிரட்டுவது உள்ளிட்ட ஆறு பிரிவுகளில் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. எனவே, விரைவில் அவர் கைது செய்யப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.