மதிமுக பொதுச்செயலாளர் வைகோ அவர்களின் கார் மோதியதில் விவசாயி ஒருவர் பலியாகியுள்ளார்.
சென்னையில் இருந்து திருச்சிக்கு செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் விழுப்புரம் மாவட்டம், உளுந்தூர்பேட்டை அருகே வண்டிப்பாளையம் என்ற இடத்தில் சைக்கிளில் சென்ற விவசாயி சக்திவேல் என்பவர் மீது கார் ஒன்று மோதியது.
இதில் சக்திவேல் படுகாயம் அடைந்தார். விபத்து நடந்ததையடுத்து கார் டிரைவர் தப்பியோடிவிட்டார். இதற்குள் விபத்தில் அடிப்பட்ட சக்திவேல் உயிரிழந்தார். இதனையடுத்து உயிரிழந்த சக்திவேலின் உறவினர்கள் மற்றும் ஊர்மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
காவல் துறையினர் நடத்திய விசாரணையில் விபத்தை ஏற்படுத்திய கார், மதிமுக பொதுச்செயலாளர் வைகோவுக்கு சொந்தமானது என்றும், அந்த காரில் டிரைவர் மட்டும்தான் வந்தார் என்றும், வைகோ வரவில்லை என்றும் தெரிய வந்தது.
வைகோ சென்னையில் இருந்து திருச்சிக்கு விமானத்தில் சென்ற வைகோவை அழைத்துச் செல்ல திருச்சிக்கு காரில் ஓட்டுநர் விரைந்துள்ளார். அப்போது திடீரென சாலையின் குறுக்கே ஒருவர் திடீரென வர கார் மோதி விபத்துக்குள்ளாகி உள்ளது.
பொதுமக்களை சமாதானம் செய்து வைத்த காவல் துறையினர். மேலும், விபத்துக்குள்ளான காரை பறிமுதல் செய்து வழக்குப்பதிவு செய்ததுடன் தப்பியோடிய டிரைவரை தேடி வருகின்றனர்.