Publish Date: Wed, 26 Aug 2020 (07:48 IST)
Updated Date: Wed, 26 Aug 2020 (08:03 IST)
தமிழகத்தில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வுகளை நடத்தாமல் அனைவரும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்ட நிலையில் தனித்தேர்வர்களுக்கு தேர்வு நடத்த அரசு முடிவு செய்துள்ளது.
கொரோனா காரணமாக அறிவிக்கபட்ட லாக்டவுன் காரணமாக தமிழகத்தில் பத்தாம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு நடத்த முடியாத சூழல் உருவானது. அதனால் அனைத்து மாணவர்களும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டு காலாண்டு மற்றும் அரையாண்டு ஆகிய தேர்வுகளில் பெற்ற மதிப்பெண்களின் அடிப்படையில் மதிப்பெண்கள் வழங்கப்பட்டன.
அதுபோல தனித்தேர்வர்களும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட வேண்டும் என நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டது. இந்த வழக்கில் பதிலளித்த அரசு வழக்கறிஞர் ‘தனித்தேர்வர்களுக்கு செப்டம்பர் 21ஆம் தேதி முதல் 26ஆம் தேதி வரை தேர்வு நடக்கவுள்ளது. அதன் பின் தேர்வு முடிவுகள் அறிவிக்கப்படும்’ எனத் தெரிவித்துள்ளார். அதன் பின்னர் மேல்நிலை மற்றும் பாலிடெக்னிக் வகுப்புகளுக்கான சேர்க்கை நடத்தப்படும் எனத் தெரிவித்துள்ளார்.