Publish Date: Sun, 07 Jun 2020 (07:59 IST)
Updated Date: Sun, 07 Jun 2020 (08:34 IST)
பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுத வரும் மாணவர்கள் அனைவரும் காய்ச்சல் பரிசோதனை செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு ஜூன் 1-ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்ட நிலையில் அதன் பின்னர் அரசியல் கட்சிகள் எதிர்ப்பு காரணமாக ஜூன் 15ஆம் தேதிக்கு மாற்றப்பட்டது. இந்த நிலையில் பத்தாம் வகுப்பு தேர்வை ஜூன் 15ஆம் தேதி நடத்த தமிழக அரசு தீவிர ஏற்பாடுகள் செய்து வருகிறது . இதையடுத்து மாணவ மாணவிகளுக்கு பள்ளியில் வைத்து ஹால் டிக்கெட்கள் வழங்கப்பட்டு வருகின்றன.
இந்நிலையில் பொதுத் தேர்வு குறித்து நேற்று மாலை முக்கிய அறிவிப்பைத் தமிழக அரசு வெளியிட்டுள்ளது. அதில் ‘பொதுத்தேர்வு எழுத வரும் மாணவர்களுக்குக் காய்ச்சல் இருப்பது தெரியவந்தால் அவர்களது விருப்பத்தின் அடிப்படையில் வீட்டுக்கு அனுப்பப்படுவார்கள். அவ்வாறு அனுப்பப்படும் மாணவர்கள் துணைத் தேர்வில் தேர்வுகளை எழுதிக் கொள்ளலாம். 37 டிகிரி செல்சியஸ் வெப்ப நிலை இருந்தால் மட்டுமே மாணவர்கள் தேர்வு எழுத அனுமதிக்கப்படுவர். காய்ச்சல் இருந்தாலும் மாணவர்கள் விரும்பினால் தனி அறையில் தேர்வு எழுத அனுமதிக்கப்படுவார்கள். மாணவர்களுக்குக் காலையிலும் மாலையிலும் உடல் வெப்ப பரிசோதனை செய்யப்பட வேண்டும். மாணவர்களின் உடல்நிலை குறித்த விவரங்களைப் பதிவேட்டில் பதிவு செய்ய வேண்டும். சிறப்புப் பேருந்தில் 60 சதவிகித மாணவர்கள் மட்டும் ஏற அனுமதிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.’ எனக் கூறப்பட்டுள்ளது.