Publish Date: Thu, 24 Oct 2024 (11:07 IST)
Updated Date: Thu, 24 Oct 2024 (11:08 IST)
ஈரோடு அருகே உள்ள ஒரு பள்ளியில் மாதாந்திர தேர்வு எழுதிக் கொண்டிருந்த மாணவி ஒருவர் திடீரென மயங்கி விழுந்து மரணம் அடைந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஈரோடு மாவட்டம் பவானி பகுதியைச் சேர்ந்த முருகானந்தம்-சாந்தி தம்பதியின் மகள் ஹரிணி எட்டாம் வகுப்பு படித்து வந்தார். அவர் அங்குள்ள தனியார் பள்ளியில் படித்து வந்த நிலையில், மாதாந்திர தேர்வுக்காக பள்ளிக்குச் சென்றார்.
இரண்டு நாட்களாக அவருக்கு மர்ம காய்ச்சல் இருந்ததாக கூறப்பட்ட நிலையில், விடுமுறை எடுத்திருந்தார். ஆனால், மாதாந்திர தேர்வு என்பதால் அவரது பெற்றோர் ஹரிணியை பள்ளிக்கு அழைத்துச் சென்றனர்.
இந்நிலையில், வகுப்பறையில் தேர்வு எழுதிக் கொண்டிருந்தபோது திடீரென ஹரிணி மயங்கி விழுந்தார். உடனடியாக பள்ளி வாகனத்தில் அவர் தனியார் மருத்துவமனைக்கு அனுமதிக்கப்பட்டார். தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட போதிலும், அவர் உயிரிழந்தார் என கூறப்படுகிறது. இதுகுறித்து காவல்துறையினர் விசாரணை செய்து வருகின்றனர்.
ஏற்கனவே, பவானி பகுதியைச் சேர்ந்த பள்ளி மாணவர் ஒருவர் கடந்த மாதம் உயிரிழந்த நிலையில், வடமாநில தொழிலாளர்கள் இருவர் எலி காய்ச்சலால் அதே பகுதியில் உயிரிழந்தனர். இந்நிலையில், தற்போது பவானி பகுதியில் பள்ளி மாணவி ஒருவரும் உயிரிழந்ததை அடுத்து, மர்ம காய்ச்சலை கட்டுப்படுத்த அரசு தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அந்த பகுதி மக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.