Publish Date: Thu, 10 Mar 2022 (08:42 IST)
Updated Date: Thu, 10 Mar 2022 (08:47 IST)
ஈரோடு மாவட்டத்தில் பள்ளி ஒன்றில் மாணவர்கள் தரையில் பெயிண்ட் அடிக்கும் வீடியோ சர்ச்சையான நிலையில் அதுகுறித்து பள்ளி நிர்வாகம் விளக்கம் அளித்துள்ளது.
ஈரோடு மாவட்டம் கொடுமுடியை அடுத்து உள்ள பெரியூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் மாணவ, மாணவிகள் பலர் படித்து வருகின்றனர். சமீபத்தில் இந்த பள்ளி வளாகத்தில் மாணவர்கள் சிலர் தரைக்கு வெள்ளை பெயிண்ட் அடிக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியது.
இந்நிலையில் இதுகுறித்து விளக்கமளித்துள்ள அப்பள்ளி தலைமை ஆசிரியை தனலட்சுமி, மாணவ, மாணவிகள் தாங்களாகவே ஆர்வத்துடன் பள்ளி சுவர்களில் ஓவியம் தீட்டுவது, வண்ணம் பூசுவது வழக்கமான ஒன்று என்றும், கோலம் போடுவதற்காக மாணவர்கள் பெயிண்ட் அடித்தபோது யாரோ வீடியோ எடுத்து அதை தவறாக பதிவு செய்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார். இதுகுறித்து விசாரணை மேற்கொள்ள உத்தரவிட்டுள்ளதாக மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் தெரிவித்துள்ளார்.