Publish Date: Fri, 23 Aug 2019 (09:13 IST)
Updated Date: Fri, 23 Aug 2019 (09:15 IST)
முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி முதலீடுகளைக் கவர்வதற்காக வெளிநாடுகள் செல்ல உள்ள நிலையில் அவருக்குப் பதிலாக பொறுப்பு முதல்வராக யாரும் நியமிக்கப்பட மாட்டார்கள் எனத் தெரிகிறது.
கடந்த ஜனவரி மாதம் இரண்டாவது உலக முதலீட்டாளர்கள் மாநாடு சென்னை நந்தம்பாக்கத்தில் நடத்தப்பட்டது. இந்த மாநாடு மூலம் 3 லட்சத்து 431 கோடி ரூபாய் தொழில் முதலீடு தமிழகத்துக்கு வந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது. மேலும் முதலீடுகளை ஈர்க்க யாதும் ஊரே என்ற இணையதளம் அமைக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில் வெளிநாடுகளில் உள்ள தொழில் முனைவோரைக் கவர்வதற்காக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி 14 நாட்கள் அமெரிக்கா மற்றும் இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகளுக்கு பயணம் மேற்கொள்ள இருக்கிறார். இந்தப் பயணத்தில் தமிழகத்தில் இருந்து புலம்பெயர்ந்த தொழிலதிபர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி முதலீடுகளை ஈர்க்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
வரும் ஆகஸ்ட் 18 ஆம் தேதி தொடங்கவுள்ள இந்தப் பயணத்தில் சில அமைச்சர்களும் அதிகாரிகளும் முதல்வருடன் செல்லவுள்ளனர். இதனால் தமிழகத்துக்கு அதிக முதலீடுகள் கிடைக்க வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் அந்த 14 நாட்களும் தமிழகத்துக்கு யார் பொறுப்பு முதல்வராக நியமிக்கப்படுவார்கள் என்ற கேள்வி எழுந்தது. துணை முதல்வராக இருக்கும் ஓ பன்னீர் செல்வமா அல்லது முதல்வருக்கு நெருக்கமாக இருக்கும் அமைச்சர் வேலுமணியா என்ற சந்தேகம் அதிமுக தொண்டர்கள் மத்தியில் எழுந்தது.
இந்நிலையில் அந்த பொறுப்பு யாருக்கும் வழங்கப்படாது எனவும் வெளிநாடுகளில் இருந்த படியே எல்லா வேலைகளையும் முதல்வர் பார்ப்பார் என்றும் முக்கியமானக் கோப்புகள் அனைத்தும் பேக்ஸ் மூலம் அவரிடம் கையெழுத்து வாங்கப்படும் எனவும் கூறப்படுகிறது.