Publish Date: Fri, 15 Jun 2018 (11:54 IST)
Updated Date: Fri, 15 Jun 2018 (16:22 IST)
18 எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்க வழக்கில் தீர்ப்பு வெளியானதை அடுத்து, அந்த தொகுதிகளில் நடைபெறவுள்ள இடைத்தேர்தலில் எப்படி வெற்றி பெறுவது என்கிற ஆலோசனையில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தரப்பு ஈடுபட்டுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது.
பெரிது எதிர்பார்க்கப்பட்ட 18 எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்க வழக்கில் நேற்று சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. இதில், தலைமை நீதிபதி இந்திரா பேனர்ஜி 18 எம்.எல்.ஏக்களை தகுதி நீக்கம் செய்த சபாநாயகரின் உத்தரவு செல்லும் என தீர்ப்பு வழங்கினார். ஆனால், நீதிபதி சுந்தர் வழங்கிய தீர்ப்பில், சபாநாயகரின் உத்தரவு செல்லாது என தீர்ப்பு வழங்கினார்.
இரு நீதிபதிகளும் இரு வேறுபட்ட தீர்ப்புகளை வழங்கியதால், இந்த வழக்கை விசாரிக்க 3 வது நீதிபதி அமர்த்தப்படுவார் என தலைமை நீதிபதி தீர்ப்பளித்துள்ளார். எனவே, இந்த வழக்கில் தீர்ப்பு கிடைப்பது தள்ளிப் போயுள்ளது. இந்த தீர்ப்பு தினகரன், திமுக தரப்பினருக்கு ஏமாற்றத்தையும் அளித்துள்ளது.
அதே சமயம் இந்த தீர்ப்பினால் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தரப்பு நிம்மதி பெருமூச்சு விட்டுள்ளதாம். அதோடு, மூன்றாம் நீதிபதி நியமிக்கப்பட்டாலும், அவரின் தீர்ப்பும் தலைமை நீதிபதியின் தீர்ப்பை பின்பற்றித்தான் இருக்கும். எனவே, அதுபற்றி கவலை கொள்ளத்தேவையில்லை. நமது கவனம் எல்லாம் 18 தொகுதிகளிலும் நடைபெறவுள்ள இடைத்தேர்தலில் எப்படி வெற்றி பெறப்போகிறோம் என்பது பற்றியே இருக்க வேண்டும் என முதல்வர் தரப்பு உற்சாகமாக கூறியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.