Publish Date: Fri, 07 Sep 2018 (11:03 IST)
Updated Date: Fri, 07 Sep 2018 (11:06 IST)
குட்கா விவகாரம் தொடர்பாக அமைச்சர் விஜயபாஸ்கர், முன்னாள் அமைச்சர் ரமணா மற்றும் காவல்துறை உயரதிகாரிகளான தமிழ்நாடு டிஜிபி டிகே.ராஜேந்திரன், முன்னாள் டிஜிபி ஜார்ஜ், உள்பட பலரது வீடுகள் மற்றும் அலுவலகங்களில் சிபிஐ ரெய்டு நடத்தியது. நேற்று காலை வரை நீடித்த இந்த சோதனையில் பல ஆவணங்களை சிபிஐ அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர்.
சோதனையின் முடிவில், சென்னையில் ஏ.வி.மாதவராவ், உமாசஙகர் குப்தா, மத்திய கலால் துறை பாண்டியன்,உணவு பாதுகாப்புத்துறை அதிகாரி செந்தில் முருகன் ஆகியோரை தற்போது சிபிஐ அதிகாரிகள் கைது செய்துள்ளனர். முன்னதாக இன்று காலை குட்கா ஊழலில் இடைத்தரகர்களாக செயல்பட்ட ராஜேஷ், நந்தகுமார் ஆகியோர் கைது செய்யப்பட்டு புழல் சிறையிலும் அடைக்கப்பட்டுள்ளனர்.
இந்த விவகாரம் அரசுக்கும், காவல்துறைக்கும் பெரும் தலைகுனிவை ஏற்படுத்தியுள்ளது. மேலும், டிஜிபி ராஜேந்திரன், சுகாதரத்துறை அமைச்சர் விஜய்பாஸ்கர் என அனைவரும் ராஜினாமா செய்ய வேண்டும் என நெருக்கடிகளும் அதிகரித்து வருகிறது.
ஆனால், இது எனக்கு வைக்கப்பட்ட செக். போன வருடம் குடியரசு தலைவர் தேர்தலில் அவர்களுக்கு ஆதரவாக வாக்களிக்க வேண்டும் என்பதற்காக ரெய்டை நடத்தினார்கள். தற்போது, நம் கூட்டணி வேண்டும் என்பதற்காக இந்த ரெய்டை நடத்தியுள்ளனர். திமுகவின் கூட்டணி கதவு மூடிவிட்டது. நம்மை விட்டால் அவர்களுக்கு வேறு வழியில்லை. எனவே, அவர்களுக்கு நாம் பயப்பட வேண்டும் என இப்படி செய்துள்ளனர். நான் இதற்கெல்லாம் பயப்படப்போவதில்லை. விஜயாபாஸ்கரை நீக்கப்போவதும் இல்லை” என தனக்கு நெருக்கமானவர்களிடம் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கூறியதாக செய்திகள் வெளியே கசிந்துள்ளது.