Publish Date: Wed, 15 Jun 2022 (12:13 IST)
Updated Date: Wed, 15 Jun 2022 (12:16 IST)
அதிமுகவை ஒற்றை தலைமையில் இணைப்பது குறித்த பேச்சு எழுந்துள்ள நிலையில் ஈபிஎஸ் – ஓபிஎஸ் தனித்தனியே ஆலோசனை நடத்தி வருவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அதிமுக பொதுச்செயலாளராக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா இருந்தவரை அதிமுக ஒற்றை தலைமையில் குழப்பம் இல்லாமல் செயல்பட்டு வந்தது. ஜெயலலிதா மறைவுக்கு பிறகு சசிக்கலா அந்த பதவியை ஏற்றாலும் பின்னர் அவர் சிறை சென்றார். அதன்பின் கட்சிக்கு பொதுச்செயலாளர் இல்லாமல் ஈபிஎஸ் – ஓபிஎஸ் இணைந்து ஒருங்கிணைத்து நடத்தி வருகின்றனர்.
ஆனால் ஒருபக்கம் எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்களுக்கும், ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர்களுக்கும் இடையே அடிக்கடி முரண்பாடுகளும் எழுந்து வருகின்றன. நேற்று அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்திற்கு பின் பேசிய அதிமுக ஜெயக்குமார், கட்சிக்கு ஒற்றைத் தலைமை தேவை என வலியுறுத்தி பேசியிருந்தார்.
இந்நிலையில் இன்று எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் தங்களது ஆதரவாளர்களுடன் தனித்தனியே ஆலோசனை மேற்கொண்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இதனால் தலைமை என்ன முடிவு எடுக்கப்போகிறது என தொண்டர்கள் குழப்பத்தில் உள்ளனர்.