Publish Date: Wed, 15 Jul 2020 (17:11 IST)
Updated Date: Wed, 15 Jul 2020 (17:14 IST)
இந்த ஆண்டு பொறியியல் படிப்பிற்கான மாணவர் சேர்க்கைக்கான ஆன்லைன் பதிவு இன்று மாலை 6 மணிக்கு தொடங்கும் என உயர்கல்வித்துறை அமைச்சர் அன்பழகன் தகவல் தெரிவித்துள்ளார். இதனால் மாணவர்களிடையே பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
இன்று தொடங்கும் ஆன்லைன் பதிவு வரும் ஆகஸ்ட் 16 வரை ஆன் லைனில் பதிவு செய்யலாம் என்றும், விளையாட்டு பிரிவை சேர்ந்த மாணவர்கள் சான்றிதழ் சரிபார்ப்புக்காக நேரில் வர வேண்டும் என்றும், மற்ற மாணவர்கள் வீட்டிலிருந்தே சான்றிதழ் சரிபார்க்க வசதியாக மென்பொருள் உருவாக்கப்பட்டுள்ளது என்றும் அமைச்சர் அன்பழகன் தெரிவித்துள்ளார்.
கடந்த ஆண்டு 8000 மாணவர்கள் தவிர மற்ற மாணவர்கள் ஆன்லைனிலேயே சான்றிதழை சரிபார்த்தனர் என்றும் அதேபோல் இந்த ஆண்டும் சான்றிதழ் ஆன்லைனிலேயே சரிபார்க்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.
மேலும் சான்றிதழ் சரிபார்ப்புக்காக வரும் மாணவர்களுக்கு போதுமான பாதுகாப்பு வசதிகள் செய்யப்பட்டுள்ளதாகவும், கொரோனா தொற்று பரவாமல் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார். மேலும் தமிழகம் முழுவதும் 465 கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கான கவுன்சிலிங் நடைபெறும் என்றும் அமைச்சர் மேலும் கூறினார்