Publish Date: Sat, 19 Feb 2022 (11:35 IST)
Updated Date: Sat, 19 Feb 2022 (11:37 IST)
மதுரையில் ஹிஜாபை அகற்ற சொன்ன பாஜக முகவர் உள்ளிட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க மாநில தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
தமிழக நகர்புற உள்ளாட்சி தேர்தல் இன்று ஒரே கட்டமாக நடைபெறுகிறது. காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கிய நிலையில் பொதுமக்கள் பலர் காலை முதலே ஆர்வமாக தனது வாக்குகளை செலுத்தி வருகின்றனர்.
இந்நிலையில் மேலூர் நகராட்சி 8வது வார்டு வாக்கு சாவடியில் வாக்களிக்க இஸ்லாமிய பெண் ஒருவர் ஹிஜாப் அணிந்து வந்துள்ளார். அவரை ஹிஜாபை அகற்றும்படி வாக்குச்சாவடியில் இருந்த பாஜக முகவர் கூறியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு அந்த பெண் மறுத்த நிலையில் பிற கட்சி முகவர்கள் பாஜக முகவரின் செயலை கண்டித்துள்ளனர். பின்னர் தேர்தல் அதிகாரிகள் பாஜக முகவரை வெளியேற்றியுள்ளனர்.
மேலும், வாக்கு செலுத்த வருபவர்கள் என்ன உடை அணிய வேண்டுமென யாரும் கட்டாயப்படுத்த முடியாது என கூறியுள்ள மாநில தேர்தல் ஆணையம், ஹிஜாப் அணிந்த வாக்காளர்களுக்கு எதிர்ப்பு தெரிவித்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிட்டுள்ளது.