அதிமுகவை உடைக்க நினைப்பவர்கள் மூக்குடைந்து போவார்கள் என செங்கோட்டையன் குறித்த கேள்விக்கு எடப்பாடி பழனிச்சாமி பதில் அளித்துள்ளார்.
அதிமுகவில் செங்கோட்டையன் மற்றும் எடப்பாடி பழனிச்சாமி இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளதாகவும், இதனால் செங்கோட்டையன் அதிமுகவை உடைத்து ஒரு தனி பிரிவாக செயல்படுத்தப் போகிறார் என்றும் வதந்திகள் வெளிவந்து கொண்டிருக்கின்றன. ஆனால் செங்கோட்டையனை சமாதானப்படுத்த தங்கமணி, வேலுமணி உள்ளிட்டோர் முயற்சி செய்து வருவதாகவும், இதனால் செங்கோட்டையன் வேறு எந்த விபரீத முடிவையும் எடுக்க வாய்ப்பில்லை என்றும் அதிமுக வட்டாரங்கள் கூறுகின்றன.
இந்த நிலையில், இன்று செய்தியாளர்கள் சந்திப்பின்போது, "செங்கோட்டையன் அதிமுகவை விட்டு பிரிந்து சென்று விடுவாரா?" என்ற கேள்விக்கு அவர் பதிலளிக்கும்போது,
"ஏன் இப்படி எங்களை பிரித்து விடுவதற்கு குறியாக இருக்கிறீர்கள்? எப்போதும் அதிமுகவில் குழப்பம் ஏற்படாதா என்று கேள்வி கேட்டுக்கொண்டிருக்கிறீர்களே! அதற்குப் பதிலாக நாங்கள் ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்று நினைக்க முடியாதா? நாங்கள் எப்போதும் ஒற்றுமையாகவே இருக்கிறோம். எங்களை யாராலும் பிரிக்க முடியாது.
நான் முதலமைச்சர் ஆன நாளில் இருந்தே அதிமுகவை உடைக்க சிலர் திட்டமிட்டுகொண்டு இருக்கிறார்கள். ஆனால் அந்த முயற்சிகளை நாங்கள் உடைத்துக்கொண்டு வந்திருக்கிறோம். அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தை யாராலும் உடைக்க முடியாது, முடக்க முடியாது. அதை செய்ய முயற்சிப்பவர்கள் மூக்குடைந்து போவார்கள்!" என்று கூறியுள்ளார். அவரது இந்த பதில் அரசியல் வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.