Publish Date: Mon, 27 Jun 2022 (10:25 IST)
Updated Date: Mon, 27 Jun 2022 (10:29 IST)
அதிமுகவில் ஒற்றைத் தலைமை பரபரப்பு நிலவி வரும் நிலையில் இன்று அதிமுக மாவட்ட நிர்வாகிகள் கூட்டம் தொடங்குகிறது.
அதிமுகவில் ஒற்றைத் தலைமையை கொண்டு வருவது குறித்து ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி இடையே மோதல் நிகழ்ந்து வருகிறது. சில நாட்கள் முன்னதாக நடந்த அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் இதுகுறித்த பேச்சால் பரபரப்பு எழுந்த நிலையில் எந்த வித தீர்மானமும் நிறைவேறாமல் பொதுக்குழு கூட்டம் முடிவடைந்தது.
இதையடுத்து டெல்லி சென்று வந்த ஓபிஎஸ் தமிழ்நாடு முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு அதிமுக நிர்வாகிகள், தொண்டர்களிடையே ஆதரவு திரட்ட திட்டமிட்டிருந்தார். ஆனால் அதற்கு முன்பாக இன்று எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுக மாவட்ட நிர்வாகிகள் கூட்டம் அதிமுக அலுவலகத்தில் நடைபெறுகிறது. இந்த கூட்டத்தில் பங்கேற்க வேண்டாம் என ஓபிஎஸ் கூறியுள்ளார்.
இந்த கூட்டத்தில் ஓ.பன்னீர்செல்வத்தின் அதிமுக பொருளாளர் பதவியை பறிக்க திட்டமிடப்பட்டுள்ளதாக பேச்சுகள் எழுந்துள்ளது. முன்னதாக அதிமுகவின் நமது அம்மா நாளேட்டின் நிறுவனர்கள் பெயரில் இருந்து ஓ.பன்னீர்செல்வத்தின் பெயர் நீக்கப்பட்டது. இதனால் இன்றைய அதிமுக கூட்டம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.