Publish Date: Fri, 03 Mar 2017 (22:02 IST)
Updated Date: Sat, 04 Mar 2017 (08:50 IST)
அதிமுக பொதுச் செயலாளராக சசிகலா நியமனம் செய்யப்பட்டது செல்லாது என்று ஓபிஎஸ் தரப்பினர் கடந்த சில நாட்களுக்கு முன்னர் தேர்தல் ஆணையத்திடம் புகார் மனு ஒன்றை அளித்திருந்தனர். இந்த புகார் மனுவுக்கு சசிகலா தரப்பில் இருந்து பிப்ரவரி 28-ம் தேதிக்குள் விளக்கம் அளிக்க வேண்டும் என்று தேர்தல் ஆணையம் சசிகலாவுக்கு அவர் தற்போது இருக்கும் பெங்களூர் சிறை முகவரிக்கு நோட்டீஸ் அனுப்பியது.
இந்த நோட்டீசுக்கு சசிகலாவால் அவசரகதியில் துணை பொதுச்செயலாளராக நியமனம் செய்யப்பட்ட டிடிவி தினகரன் சமிபத்தில் பதில் அனுப்பியிருந்தார். ஆனால் இந்த பதில் மனுவை தேர்தல் ஆணையம் ஏற்றுக்கொள்ளவில்லை
இதுகுறித்து தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: " கட்சியில் அதிகாரப்பூர்வ பதவியில் இருப்பவரே இந்த மனுவிற்கு பதிலளிக்க முடியும். தேர்தல் ஆணையத்திற்கு கொடுக்கப்பட்ட மனுவில் தினகரனின் பொறுப்பு குறித்த எந்த தகவலும் இல்லை. . தினகரன் அதிமுகவின் எந்த பொறுப்பிலும் இல்லை. எனவே இந்த கடிததை ஏற்க முடியாது.
சசிகலா கையெழுத்திட்ட கடித்தினை அவர் சார்பில் அங்கிகரிக்கப்பட்ட நபர் யாரேனும் கொடுக்கலாம். வரும் மார்ச் 10-ம் தேதிக்குள் சசிகலா கையொப்பமிட்ட பதிலை அனுப்ப வேண்டும்" இவ்வாறு தேர்தல் ஆணையத்தின் செய்திக்குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது
சசிகலா சிறைக்கு செல்லும் ஒருசில மணி நேரத்திற்கு முன்னர் துணை பொதுச்செயலாளர் பதவியை டிடிவி தினகரனுக்கு வழங்கினார். ஆனால் இதுகுறித்து முறைப்படி தேர்தல் ஆணையத்திற்கு எந்தவித தகவலும் அனுப்பவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.