Publish Date: Mon, 03 Jun 2024 (10:10 IST)
Updated Date: Mon, 03 Jun 2024 (10:11 IST)
சென்னையில் மதுபோதையில் வாகனம் ஓட்டிய காவலர் ஆயுதப்படைக்கு மாற்றம் செய்யப்பட்டதாகவும், அவர் மதுபோதையில் வாகன ஓட்டிய வீடியோ சமூக வலைதளங்களில் பரவிய நிலையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிகிறது.
சென்னை முடிச்சூரில் மதுபோதையில் தாறுமாறாக கார் ஓட்டிய காவலர் ஸ்ரீராம துரை என்பவரின் வாகனத்தை நிறுத்தி கேள்வி எழுப்பிய பொதுமக்கள், இதனை வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பதிவு செய்தனர். இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் பரவிய நிலையில் கண்ணகி நகர் காவல் நிலையத்தில் பணியாற்றி வந்த ஸ்ரீ ராம துரை தற்போது ஆயுதப்படைக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
முன்னதாக மதுபோதையில் காவலர் ஸ்ரீ ராம துரை காரை ஓட்டி வந்த நிலையில் அதை பொதுமக்கள் தட்டி கேட்டதோடு அதை முழுவதுமாக வீடியோ எடுத்தனர். மேலும் பொதுமக்கள் கேள்விக்கு அவர் பதில் சொல்லாத முடியாத அளவுக்கு போதையில் இருந்ததும் அந்த வீடியோவில் தெரியவந்துள்ளது.
இது குறித்து யாரும் புகார் செய்யவில்லை என்றாலும் சமூக வலைதளங்களில் பரவிய வீடியோவின் அடிப்படையில் காவலர் ஸ்ரீ ராம துரை ஆயுதப்படைக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.