Publish Date: Fri, 03 May 2019 (15:09 IST)
Updated Date: Fri, 03 May 2019 (15:13 IST)
சென்னை வில்லிவாக்கத்தில் குடிபோதையில் வாகனம் ஒட்டிவந்தவர் சாலையில் சென்றுகொண்டிருந்த மூதாட்டியின் மீது மோதிவிட்டுச் சென்றார். இதில் வயதான பெண்மணி உட்பட இருவர் இறந்தனர். மேலும் ஒருவர் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
வில்லிவாக்கம் பாடி மேம்பாலத்திற்கு அருகில் இந்த விபத்து நடந்துள்ளதாகத் தெரிகிறது. இன்று காலை ஏழு மணிஅளவில் இப்பகுதில் மதுபோதையில் தனது சிவப்புக் கலர் இன்னோவா காரை வேகமாக ஓட்டிவந்துள்ளார்.
அப்போது ஒரு தெருவில் வளைவில் திரும்பும் போது மெதுவாகச் சென்றுகொண்டிருந்த ஒரு வயதான பாட்டியின் மீது மோதிவிட்டு அப்போதும் நிற்காமல் சென்றுள்ளார் வாகனத்தை ஓட்டிவந்தவர். மேலும் அதே பகுதியில் நின்றிருந்த ஆதிலட்சுமி , மோகன கோபால் ஆகிய இருவர் மீதும் மோதிச்சென்றுள்ளார்.
உடனே அப்பகுதி மக்கள் காரை மடக்கிக் காரை ஓட்டிவந்தவனை பிடித்தனர். ஆனால் வயதான மூதாட்டியும் , மோகன கோபால் இருவரும் இறந்ததை அடுத்து கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையில் உடற்கூறு பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளது. மேலும் ஆதிலட்சுமி மட்டும் தீவிர சிகிச்சை பெற்றுவருவதாகத் தெரிகிறது.
இதனையடுத்து மதுபோதையில் காரை ஓட்டிவந்தவரிடம், சிசிடிவி காட்சிகளை ஆதாரமாக வைத்து போலீஸார் விசாரணை நடத்திய பின்னர் அவரை சிறைக்குள் தள்ள வாய்ப்புள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.