Publish Date: Tue, 02 Jul 2024 (08:23 IST)
Updated Date: Tue, 02 Jul 2024 (08:25 IST)
ஜாதி வாரி கணக்கெடுப்பு எடுக்க மத்திய அரசை நாங்கள் தான் வழியுறுத்த வேண்டுமென்றால் திமுக ஆட்சி எதற்கு என பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கேள்விகளை எழுப்பி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
ஜாதி வாரி கணக்கெடுப்பு குறித்து திமுக மற்றும் பாமக இடையே வார்த்தை போர் நடைபெற்று வரும் நிலையில் மக்கள் தொகை கணக்கெடுப்பை மத்திய அரசு எடுக்கும்போது ஜாதி வாரி கணக்கெடுப்பையும் சேர்த்து எடுக்க மத்திய அரசை வலியுறுத்துவோம் என்றும் அதற்கு உங்களுடைய தோழமை கட்சியான பாஜகவிற்கு நீங்கள் தான் அழுத்தம் கொடுக்க வேண்டும் என்றும் பாமகவிற்கு அமைச்சர் ரகுபதி தெரிவித்திருந்தார்.
இதற்கு ராமதாஸ் பதிலடி அளித்துள்ள டாக்டர் ராமதாஸ், திமுக இவ்வாறு கூறியிருப்பது தமிழ்நாட்டின் சமூக நீதியை காப்பதில் திமுக அரசின் இயலாமையை கூறுகிறது என்று அவர் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டில் சமூக நீதியை காக்க ஜாதி வாரி கணக்கெடுப்பு தேவை என்றும் மத்திய அரசை பாட்டாளி மக்கள் கட்சி தான் வலியுறுத்த வேண்டும் என்றால் தமிழகத்தில் திமுக ஆட்சி ஏன் இருக்க வேண்டும் என்றும் பதவி விலகி விடலாமே என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.
நாடாளுமன்றத்தில் திமுக அணிக்கு 39 எம்பிக்கள் எதற்கு என்றும் அவர்களும் பதவி விலகி விடலாமே என்றும் அதிகாரத்தை சுவைப்பதற்கு மட்டும்தான் திமுகவுக்கு மக்கள் வாக்களித்தார்களா என்றும் அடுக்கடுக்கான கேள்விகளை கேட்டுள்ளார்.
பீகார், கர்நாடகா, ஒடிசா, ஆந்திரா, தெலுங்கானா, ஜார்கண்ட் போன்ற மாநிலங்களில் ஜாதிவாரி கணக்கெடுப்பை மத்திய அரசுதான் நடத்த வேண்டும் என்று தட்டிக் கலைக்கவில்லை என்றும் அதேபோல் தமிழக அரசு சாதி வாரி கணக்கெடுப்பதில் என்ன தயக்கம் என்றும் அவர் கேள்வி எழுப்பி உள்ளார்.