Publish Date: Wed, 06 Nov 2019 (14:37 IST)
Updated Date: Wed, 06 Nov 2019 (14:40 IST)
காயத்தால் துடிதுடித்த நல்ல பாம்புக்கு, இரண்டு மணி நேர அறுவை சிகிச்சை செய்யப்பட்ட சம்பவம் நடந்துள்ளது.
மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றத்தில் குடியிருப்பு பகுதியில் ஒரு நல்ல பாம்பு, உடலில் காயத்தோடு வீதியில் உயிருக்கு போராடி வந்தது. இதனை கண்ட அப்பகுதி மக்கள், ஊர்வனம் அமைப்புக்கு தகவல் கொடுத்தனர்.
இதன் பிறகு காயத்தோடு துடித்த நல்ல பாம்பை ஊர்வன அமைப்பினர், கால்நடை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பாம்பை பரிசோதித்த மருத்துவ குழுவினர், பாம்புக்கு அறுவை சிகிச்சை செய்தால் தான் உயிர்பிழைக்கும் என கூறினர்.
இதனை தொடர்ந்து பாம்புக்கு மயக்க ஊசி கொடுக்கப்பட்டது. பின்பு இரண்டு மணி நேரம் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. அதன் பின்பு சாதாரணமாக ஊர்ந்து சென்ற நல்ல பாம்பை வனத்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டது. இறுதியாக புதுக்கோட்டை அருகே உள்ள வனப்பகுதியில் நல்ல பாம்பு விடப்பட்டது.
உயிருக்கு போராடிய பாம்பை மக்கள் கால்நடை மருத்துவமனைக்கு கொண்டு சென்று சிகிச்சை அளித்து காப்பாற்றிய சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.