ஜெயலலிதாவுக்கு ஒரு நீதி; எங்களுக்கு ஒரு நீதி: கொந்தளிக்கும் ஸ்டாலின்!
ஜெயலலிதாவுக்கு ஒரு நீதி; எங்களுக்கு ஒரு நீதி: கொந்தளிக்கும் ஸ்டாலின்!
Publish Date: Thu, 01 Sep 2016 (13:40 IST)
Updated Date: Thu, 01 Sep 2016 (13:44 IST)
தமிழக சட்டப்பேரவையில் இன்று முன்னாள் தலைமைச் செயலாளரும், தமிழ்நாடு தொழில் வளர்ச்சிக் கழகத்தின் தலைவருமான ஞானதேசிகன் சஸ்பெண்ட் செய்யப்பட்டது குறித்த விளக்கத்தை பேரவையில் தெரிவிக்க வேண்டும் என எதிர் கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் பேசினார்.
இதற்கு சபாநாயகர் தனபால் மறுப்பு தெரிவித்தார். மேலும் அதிகாரிகளின் பெயரை சட்டசபையில் குறிப்பிடக்கூடாது என ஸ்டாலின் பேசியதை அவைக்குறிப்பில் இருந்து நீக்கினார் சபாநாயகர் தனபால்.
இதையடுத்து திமுக உறுப்பினர்கள் அனைவரும் சட்டசபையில் இருந்து வெளிநடப்பு செய்தனர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஸ்டாலின், தமிழ்நாடு தொழில் வளர்ச்சிக் கழகத்தின் தலைவர் ஞானதேசிகன் சஸ்பெண்ட் செய்யப்பட்டது குறித்த விளக்கத்தைக் கேட்டதற்கு, அதிகாரியின் பெயரைக் குறிப்பிட்டு பேசக்கூடாது என்று கூறி அவைக்குறிப்பில் இருந்து அதை நீக்குகிறார் சபாநாயகர்.
ஆனால், முதலமைச்சர் ஜெயலலிதா, இதே கூட்டத்தொடரில், சட்டப்பேரவைச் செயலாளர் ஜமாலுதீன் பெயரை சொல்லி அவையிலே பதிவு செய்கிறார். முதலமைச்சருக்கு ஒரு நீதி, எங்களுக்கு ஒரு நீதியா? என்று தான் வெளிநடப்பு செய்துள்ளோம் என்றார் ஸ்டாலின்.