Publish Date: Mon, 30 Mar 2020 (12:22 IST)
Updated Date: Mon, 30 Mar 2020 (12:24 IST)
மு.க.ஸ்டாலினின் கருத்துக்கு எதிராக அறிக்கை விட்ட திமுகவை சேர்ந்த கே.பி.ராமலிங்கம் கட்சி பதவியில் இருந்து நீக்கப்பட்டார்.
தமிழகம் முழுவதும் கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள், அதில் உள்ள குறைகள், செய்யவேண்டிய அத்தியாவசிய பணிகள் குறித்து விவாதிக்க அனைத்துக்கட்சி கூட்டம் நடத்த வேண்டும் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்திருந்தார். கட்சியினர் கூடுவதை தவிர்க்கும் வகையில் வீடியோ கான்பரன்ஸ் மூலம் அனைத்துக்கட்சி கூட்டம் நடத்தலாம் எனவும் அவர் கூறியிருந்தார்.
இந்நிலையில் திமுக விவசாய அணி மாநில செயலாளர் கே.பி.ராமலிங்கம் ‘கொரோனா பரவியுள்ள இந்த நிலையில் அனைத்துக் கட்சி கூட்டம் நடத்துவது அவசியமற்றது’ என்று அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார். இது திமுகவினர் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதுகுறித்து கட்சி தலைமையில் கலந்தாலோசிக்கப்பட்ட நிலையில், கே.பி.ராமலிங்கத்தை பதவியிலிருந்து விலக்குவதாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். பதவியிலிருந்து நீக்கப்பட்டாலும் தொடர்ந்து திமுக அடிப்படை உறுப்பினர் பதவியில் கே.பி.ராமலிங்கம் நீடிப்பார் என்று கூறப்பட்டுள்ளது. இந்த சம்பவம் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.