Publish Date: Thu, 05 Apr 2018 (10:36 IST)
Updated Date: Thu, 05 Apr 2018 (10:43 IST)
சென்னை அண்ணாசாலையை தொடர்ந்து மெரினால் போராட்டம் நடத்தியதால் திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
காவிரி மேலான்மை வாரியத்தை அமைக்காத மத்திய அரசுக்கு எதிராக திமுக தீவிர போராட்டங்களை முன்னெடுத்துள்ளது. இன்று திமுக சார்பாக தமிழகமெங்கும் கடையடைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால், தமிழகத்தின் பெரும்பாலான இடங்களில் கடைகள் அடைக்கப்பட்டுள்ளன. மேலும், சென்னையில் 5ம் நாளாக இன்று திமுக போராட்டத்தை கையில் எடுத்தது. சென்னை அண்ணாசாலையில் செயல் தலைவர் மு.க ஸ்டாலின் தலைமையில் சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டத்தில் வி.சி.க, காங்கிரஸ் உள்ளிட்ட பல கட்சிகளும் இணைந்தன.
அதன்பின் அவர்கள் வாலஜா சாலை வழியாக, ஸ்டாலின் தலைமையில் மெரினா கடற்கரை சாலையில் அமைந்துள்ள அண்ணா சமாதியை நோக்கி பேரணியாக சென்றனர். காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர், திருமாவளவன் ஆகியோரும் கருப்புக் கொடி ஏந்தியபடி ஸ்டாலினுடன் பேரணியாக சென்றனர்.
அப்போது, அவர்கள் மோடிக்கு எதிராக குரல் எழுப்பினர். அதை எதிர்பார்க்காத போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தினர். மேலும், தடுப்பு சுவர்களை நிறுத்தி இந்த பக்கம் செல்லக்கூடாது எனக் கூறினர். ஆனாலும், அவற்றை பொருட்படுத்தாமல் திமுகவினர் அண்ணா சமாதியை நோக்கி அவர்கள் செல்ல முயன்றனர். இதனால், போலீசாருக்கும், திமுகவினருக்கும் மோதல், தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
அதன் பின் மெரினா கடற்கரையில் உள்ள உழைப்பாளர் சிலை அருகே ஸ்டாலின் தலைமையில் ஆயிரக்கணக்கானோர் சாலை மறியலில் ஈடுபட்டனர். எனவே அங்கு போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது. எனவே, ஸ்டாலின் உள்ளிட்ட மற்ற கட்சி தலைவர்களும் கைது செய்யப்பட்டு வேனில் ஏற்றப்பட்டனர்.
ஆனாலும், ஆயிரக்கணக்கான கட்சி தொண்டர்கள் மெரினா சாலையில் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால், அவர்களை அப்புறப்படுத்தும் பணியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர். இதனால், அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.