Publish Date: Thu, 07 Dec 2017 (10:28 IST)
Updated Date: Thu, 07 Dec 2017 (17:33 IST)
ஆர்.கே.நகர் தொகுதியில் திமுகவை ஆதரிக்கும் அரசியல் கட்சிகளின் நிர்வாகிகள் திமுக வேட்பாளர் மருதுகணஷுடன் பிரச்சாரத்திற்கு செல்லாததால் அவர் விரக்தி அடைந்திருப்பதாக கூறப்படுகிறது.
ஆர்.கே.நகர் தேர்தலில் நடைபெறவுள்ள இடைத்தேர்தலில் திமுகவிற்கு விடுதலை சிறுத்தை கட்சி, காங்கிரஸ், மார்க்சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், மதிமுக உள்ளிட்ட கட்சிகள் ஆதரவு அளித்துள்ளன. எனவே, பெரும் பலத்துடன் திமுக இந்த தேர்தலில் களம் இறங்குகிறது.
முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியின் ஆட்சியின் மீது மக்களுக்கு உள்ள அதிருப்தியை பயன்படுத்தி ஆர்.கே.நகரில் எப்படியாவது வெற்றி பெற வேண்டும் என ஸ்டாலின் கணக்குப் போடுகிறார். மேலும், போலி வாக்காளர்கள் நீக்கம், சொந்த ஓட்டு வங்கி, கூட்டணி மற்றும் ஆதரவு கட்சிகளின் ஓட்டு, தினகரன் பிரிக்கும் அதிமுக ஓட்டு ஆகியவை திமுகவிற்கு சாதகமாக உள்ளன.
அந்நிலையில், மருதுகணேஷ் ஏற்கனவே தனது பிரச்சாரத்தை தொடங்கிவிட்டார். ஆனால், பிரச்சாரத்தை தொடங்கும் போது, உடன் வரும் ஆதரவு கட்சிகளின் நிர்வாகிகள், போகப் போக கழண்டு விடுகின்றனராம். மேலும், செல்லும் போது தங்கள் கட்சி கொடிகளை திமுக தொண்டர்களிடம் கொடுத்து விட்டு சென்று விடுகின்றனராம். இதனால், திமுக வேட்பாளர் மருது கணேஷ் கடும் விரக்தியில் இருப்பதாக கூறப்படுகிறது.
விடுலை சிறுத்தை, கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு ஆர்.கே.நகர் தொகுதியில் கணிசமான ஓட்டு வங்கி உள்ளது. ஆனால், அந்த கட்சி நிர்வாகிகள் பிரச்சாரத்திற்கு வந்தால்தான் ஓட்டுகளை அறுவடை செய்ய முடியும். எனவே, அக்கட்சியின் தலைவர்கள் தொகுதிக்கு வந்து திமுகவிற்கு ஆதரவாக பிரச்சாரத்திற்கு வர வேண்டும் என திமுக தொண்டர்கள் கூறி வருகின்றனர்.