Publish Date: Mon, 27 Jul 2020 (12:29 IST)
Updated Date: Mon, 27 Jul 2020 (12:56 IST)
ஓபிசி இடஒதுக்கீடு வழக்கில் உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பு குறித்து திமுக வழக்கறிஞர் வில்சன் கருத்து தெரிவித்துள்ளார்.
மருத்துவ படிப்பின் அகில இந்திய இட ஒதுக்கீட்டில் 50% இட ஒதுக்கீடு வழங்க கோரி தமிழக அரசியல் கட்சிகள் வழக்கு தொடர்ந்தன. இதுகுறித்த விசாரணையின் போது இந்திய மருத்துவ கவுன்சிலின் விளக்கங்களும் கேட்கப்பட்டிருந்தன.
முன்னதாக விளக்கம் அளித்திருந்த இந்திய மருத்துவ கவுன்சில் இடஒதுக்கீடு விவகாரங்களை பொறுத்தவரை உச்சநீதிமன்றமே முடிவெடுக்க முடியும் என கூறியிருந்தது.
இன்றைய விசாரணையில் இந்திய மருத்துவ கவுன்சிலின் வாதத்தை ஏற்க மறுத்த சென்னை உயர்நீதிமன்றம் மாநில அரசுகளின் இடஒதுக்கீடுகளை மருத்துவ கல்வியிலும் பின்பற்ற சட்டரீதியாக தடை எதுவும் இல்லை என்று கூறியுள்ளது.
மாநில அரசு கல்லூரிகளில் அகில இந்திய இடஒதுக்கீட்டில் ஓபிசி பிரிவினருக்கு இடஒதுக்கீடு வழங்குவதில் எந்த தடையும் இல்லை என கூறியுள்ளது. மேலும் இடஒதுக்கீடு வழங்குவது குறித்து மத்திய அரசு சட்டம் இயற்றலாம் எனவும் உயர்நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.
இந்நிலையில், ஓபிசி இடஒதுக்கீடு வழக்கில் உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பு சமூக நீதிக்கான போராட்டத்திற்கு கிடைத்த வெற்றி என திமுக வழக்கறிஞர் வில்சன் கருத்து தெரிவித்துள்ளார்.