Publish Date: Thu, 27 Jun 2019 (07:00 IST)
Updated Date: Thu, 27 Jun 2019 (07:00 IST)
கடந்த சில நாட்களாகவே காங்கிரஸ் கட்சியை கூட்டணியில் இருந்து கழட்டிவிடும் போக்கில் திமுக தலைவர்கள் பேசி வருவது தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கே.என்.நேருவும் உதயநிதி ஸ்டாலினும், திமுக கூட்டணியில் காங்கிரஸ் தேவையில்லை என்றே கிட்டத்தட்ட பேசிவருவது திமுக தலைமையின் அனுமதியோடுதான் என்று கூறப்படுகிறது
வரும் உள்ளாட்சி தேர்தலிலும் சரி, சட்டமன்ற தேர்தலிலும் சரி தனியாக களமிறங்கும் நோக்கத்தில் திமுக இருப்பதாகவும், அதிக சீட்டுக்களை ஒதுக்கி தேவையில்லாமல் தேசிய கட்சியை தமிழகத்தில் உள்ளே விட வேண்டாம் என்ற திட்டத்தில் திமுக இருப்பதாகவும் கூறப்படுகிறது
அதே நேரத்தில் பாஜகவுடன் நெருக்கத்தை அதிகரிக்கவும் திமுக திட்டமிட்டுள்ளதாம். பாஜகவும் திமுகவை எதிரியாக பார்க்காமல் அக்கட்சியை அரவணைத்து செல்ல திட்டமிட்டுள்ளதால் இரண்டு கட்சிகளுக்கும் இடையே ஒரு அண்டர்ஸ்டாண்டிங் ஏற்பட்டுள்ளதாக தெரிகிறது. இதனை நிரூபிக்கும் வகையில் அனைத்து கட்சி எம்பிக்களுக்கு பிரதமர் விருந்தளித்த போது கனிமொழியுடன் மோடி ஒருசில விஷயங்களை மனம் விட்டு பேசியதை இருதரப்பினர்களும் சுட்டிக்காட்டுகின்றனர்.
அரசியலில் எதுவேண்டுமானாலும் நடக்கலாம் என்று கூறப்படும் நிலையில் திமுகவிலும் என்ன வேண்டுமானாலும் நடக்கலாம் என்றே கூறப்படுகிறது