Publish Date: Thu, 12 Apr 2018 (13:01 IST)
Updated Date: Thu, 12 Apr 2018 (18:20 IST)
தமிழகம் வந்துள்ள பிரதமர் மோடிக்கு கருப்பு புறாக்கள் மூலம் திமுகவினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசை கண்டித்து தமிழகத்தில் போராட்டங்கள் வெடித்துள்ளன. அந்நிலையில், இன்று சென்னை வரும் பிரதமர் மோடிக்கு எதிராக கருப்புக்கொடி காட்டப்படும் என திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். அதற்கு காங்கிரஸ், விடுதலை சிறுத்தை, கம்யூனிஸ்ட் உள்ளிட்ட பல கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ளனர்.
அதேபோல், தமிழகம் முழுவதும் திமுகவினர் தங்கள் வீட்டில் கருப்பு கொடி ஏற்றி தங்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். அறிவாலயம் மற்றும் கோபாலபுரத்தில் உள்ள கருணாநிதியின் வீட்டிலும் கருப்புக் கொடி ஏற்றப்பட்டுள்ளது. அதேபோல், கருணாநிதி, ஸ்டாலின், திமுக செய்தி தொடர்பாளர் இளங்கோவன் உள்ளிட்டோர் கருப்பு சட்டை அணிந்துள்ள புகைப்படமும் வெளியாகியுள்ளது. ஒருபுறம் திமுக முன்னாள் மேயர் மா. சுப்பிரமணியன் இல்லத்தில் ராட்சத கருப்பு பலூன் பறக்கவிட்டு எதிர்ப்பு தெரிவித்தார்.
இது ஒருபுறம் இருக்க, கோவையில் உள்ள திமுகவினர் கருப்பு சட்டை அணிந்து கொண்டு காவிரி வாரியம் கேட்டு எழுதப்பட்ட வாசகத்தின் அட்டையை கருப்பு புறாக்கள் காலில் துண்டுசீட்டாக கட்டி, அதை பறக்கவிட்டு போராட்டம் நடத்தி வருகின்றனர்.