Publish Date: Thu, 14 Oct 2021 (11:52 IST)
Updated Date: Thu, 14 Oct 2021 (11:54 IST)
தேர்தலில் வெற்றி தோல்வி என்பது சகஜம் என்றும், அதிகார பலம் பண பலத்தை மீறி நாம் தேர்தலில் தேர்தல் களத்தில் நிற்கிறோம் என்றும், உண்மை நேர்மை உழைப்பை மட்டுமே நம்பி நாம் தேர்தலை எதிர்கொண்டோம் என்றும் தேமுதிக தலைவர் விஜயகாந்த் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில் கூறியிருப்பதாவது:
9 மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டு உள்ளன. இதில் திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி ஒன்றியத்திற்குட்பட்ட தும்பேரி இரண்டாவது வார்டு ஒன்றியக் கவுன்சிலர் பதவிக்கு முரசு சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்ற திருமதி செல்வி பழனிக்கு எனது வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
இதேபோல் தேமுதிக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர்களுக்கும் சுயேச்சையாக போட்டியிட்டு வெற்றி பெற்ற வேட்பாளர்களுக்கும் எனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.
தேமுதிக வேட்பாளர்களின் வெற்றிக்காக அரும்பாடுபட்டு அனைத்து மாவட்ட செயலாளர்கள் கழக நிர்வாகிகள் கழக தொண்டர்கள் என அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
தேர்தலில் வெற்றி தோல்வி என்பது சகஜம். அதிகார பலம் பண பலத்தை மீறி நாம் தேர்தலில் தேர்தல் களத்தில் நிற்கிறோம். உண்மை நேர்மை உழைப்பை மட்டுமே நம்பி நாம் தேர்தலை எதிர்கொண்டோம். நமக்கான காலம் காலம் நிச்சயம் வரும். அதுவரை கழகத் தொண்டர்கள் துவண்டுவிடாமல் வெற்றியை நோக்கிய அயராது பாடுபடவேண்டும். இவ்வாறு விஜயகாந்த் தனது அறிக்கையில் கூறியுள்ளார்.