Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

தேமுதிக கொடி நாள்.! அசுர வேகத்தில் புதிய உறுப்பினர்களை சேர்க்கவும்..! தொண்டர்களுக்கு பறந்த கடிதம்..!!

dmdk flag day

Senthil Velan

, ஞாயிறு, 11 பிப்ரவரி 2024 (16:00 IST)
நாளை தேமுதிக கொடி நாள் கொண்டாடப்படும் நிலையில், தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து இடங்களிலும், புதிய உறுப்பினர் சேர்க்கையை அசுர வேகத்தில் நடத்த வேண்டும் என்று தொண்டர்களுக்கு தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் வலியுறுத்தி உள்ளார்.
 
தொண்டர்களுக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில், "பிப்ரவரி 12ஆம் தேதி தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் 24ஆம் ஆண்டு கொடி நாள், நமது தலைவர் கேப்டன் இல்லாத முதல் கொடிநாள்.
 
ஒட்டுமொத்த கட்சி நிர்வாகிகளுக்கும், கட்சித் தொண்டர்களுக்கும் கேப்டனின் மறைவு மிகப்பெரிய வேதனையையும், மீளாத் துயரத்தையும் கொடுத்திருக்கிறது. கேப்டன் விஜயகாந்த், நமது ரசிகர் மன்றத்தை நற்பணி மன்றமாக மாற்றி, கடந்த 2000ஆம் ஆண்டு நமக்கான மூவர்ணக் கொடியை அறிமுகப்படுத்தினார்.
 
மேலும், தேசிய முற்போக்கு திராவிட கழகம் தொடங்கிய பின், அதை கட்சிக் கொடியாக மாற்றி, அந்த கொடி நாளை தமிழகம் முழுவதும் ஆண்டுதோறும் விழாவாகவே கொண்டாடிக் கொண்டிருந்தோம். தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் மூவர்ணக் கொடியின் வர்ணங்கள் மூலம், நமது கட்சியின் கொள்கைகளை சனாதனம், சமதர்மம், சமுகநீதி, சமசிந்தனையைப் பறைசாற்றுகின்ற ஒரு கொடியாகவே நமக்கு அதை கேப்டன் அளித்தார்.
 
சாதி, மத, மொழி வேறுபாடு இல்லாமல், அனைவருக்கும் இலவச சமச்சீர் கல்வி, தரமான மருத்துவம், வறுமை கோட்டிற்குக் கீழ் மக்கள் இல்லாத நிலை, வளமான தமிழகத்தை நமது புரட்சி தீபம் மூலம் ஒளிமயமான எதிர்காலத்தை தந்து, அனைவருக்கும் உண்ண உணவு, உடுத்த உடை, இருக்க இடம், பாதுகாக்கப்பட்ட குடிநீர், விவசாயம், படித்த, படிக்காத இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு, லஞ்சம், ஊழல் இல்லாதா நேர்மையான வெளிப்படையான ஆட்சி போன்ற எண்ணற்ற புரட்சிகரமான கொள்கைகளையும், கொடி அறிமுகப்படுத்திய அன்றே நமக்கு உறுதி செய்திருக்கிறார்.
 
அனைத்து மாவட்டம், பகுதி, நகரம், ஒன்றியம், பேரூர், ஊராட்சி கிளைகள், அனைத்து கிராமப்புற கிளை பகுதிகளில் உள்ள பழைய கொடிகளை அகற்றி, புதுக்கொடிகளை ஏற்றி, கட்சிக் கொடிகள் இல்லாத இடத்தில் புதுக் கொடிகளை அமைத்து, அந்த இடத்தில் தலைவர் கேப்டன் புகைப்படத்தை வைத்து, கேப்டனுக்கு நினைவேந்தல் போக்கு புகழஞ்சலியுடன் இந்த ஆண்டு கொடியை தமிழகம் முழுவதும் ஏற்றிட வேண்டும்.
 
webdunia
தலைவர் கேப்டனின் கோட்பாடு படி, இயன்றதைச் செய்வோம் இல்லாதவர்க்கே என்ற அடிப்படையில், நம்மால் முடிந்த உதவிகளை மாணவர்கள், இளைஞர்கள், பெண்கள் மற்றும் முதியவர்களுக்கு செய்ய வேண்டுமென அன்போடு கேட்டுக் கொள்கிறேன். நமது கட்சியை அதிகமான உறுப்பினர்களைக் கொண்ட ஒரு கட்சியாக வளர்க்க வேண்டியது, நம் ஒவ்வொருவருடைய கடமை ஆகும்.
 
ஆகையால், தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து இடங்களிலும், புதிய உறுப்பினர் சேர்க்கையை அசுர வேகத்தில் நடத்தி, அதிகமான உறுப்பினர்களை நமது கொடி நாளில் முகாம்கள் அமைத்து பெண்கள், இளைஞர்கள், மாணவர்கள் மற்றும் புதிய வாக்காளர்களை கட்சியின் உறுப்பினர்களாக சேர்க்க வேண்டும்.

 
கேப்டன் புகழ் ஓங்கவும், தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் புகழ் நிலைத்து நிற்கவும், நாம் அனைவரும் இந்த நாளிலே சூளுரை ஏற்று, நமது கட்சிக் கொடி தமிழகம் எங்கும் பட்டொளி வீசி பறக்க வைத்து, நமது முரசு எட்டுத்திக்கும் வெற்றி முரசாக கொட்ட, நாம் அனைவருமே உறுதிமொழி ஏற்போம் என தேமுதிக கொடி நாளில் கட்சி நிர்வாகிகளையும், தொண்டர்களையும் அன்போடு கேட்டுக் கொள்கிறேன் எனத் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஸ்ரீபெரும்புதூர் தொகுதிக்கு டிஆர் பாலுவுக்கு கிடையாதா? திமுக தலைமை கொடுக்கும் அதிர்ச்சி..!