Publish Date: Thu, 18 Jan 2018 (11:25 IST)
Updated Date: Thu, 18 Jan 2018 (11:28 IST)
ஜெயலலிதா மரணம் தொடர்பாக தொடர்ந்து கருத்து தெரிவித்து வரும் டிடிவி தினகரன் மற்றும் திவாகரனை கைது செய்ய வேண்டும் என அதிமுக அமைச்சர் ஜெயக்குமார் கருத்து தெரிவித்துள்ளார்.
நேற்று, மன்னார்குடியில் நடைபெற்ற எம்.ஜி.ஆர் விழாவில் கலந்து கொண்டு பேசிய சசிகலாவின் சகோதரர் திவாகரன் “ ஜெயலலிதா டிசம்பர் 4ம் தேதி மாலை 5.15 மணிக்கே இறந்து விட்டார். ஆனால், தமிழகத்தில் உள்ள அனைத்து அப்போலோ மருத்துவமனைகளின் பாதுகாப்பை உறுதி செய்யுங்கள். அதன் பின்பே அவர் இறந்தது குறித்து அறிவிக்க முடியும் என அப்போலோ ரெட்டி தெரிவித்தார்” என திவாகரன் தெரிவித்தார்.
அரசு மற்றும் அப்போலோ நிர்வாகம் ஆகியவை தொடர்ந்து ஜெயலலிதா டிசம்பர் 5ம் தேதியே இறந்துவிட்டார் எனக் கூறிவந்த நிலையில், திவாகரன் கூறியுள்ள இந்த விவகாரம் பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியது.
அந்நிலையில், தன்னுடைய கருத்து பற்றி விளக்கம் அளித்துள்ள திவாகரன் “ஜெ. மரணம் தொடர்பான எனது கருத்து தவறாக புரிந்துகொள்ளப்பட்டுள்ளது. மரணத்தில் இரண்டு வகை உள்ளது. ஒன்று க்ளீனிக்கல், மற்றொன்று பயலாஜிக்கல் மரணம். 2016 டிசம்பர் 4ம் தேதி மாலை 5.15 மணிக்கு ஜெயலலிதா க்ளினிக்கல் மரணம் அடைந்தார். அவரை உயிர் பிழைக்க வைக்க மருத்துவர்கள் ஒரு நாள் உயர் சிகிச்சை அளித்தனர்” என அவர் விளக்கம் அளித்தார்.
இந்நிலையில், இதுபற்றி செய்தியாளர்களிடம் கருத்து தெரிவித்த அமைச்சர் ஜெயக்குமார் “ஜெ.வின் மரணம் தொடர்பான விவகாரத்தில் யாராக இருந்தாலும் விசாரணை கமிஷனிடம் தகவல்களை கூற வேண்டும். ஜெ.வை வைத்து அரசியல் செய்து வரும் டிடிவி தினகரன், திவாகரன் போன்றோர் தன்னிச்சையாக கருத்து தெரிவித்து வருகின்றனர். அவர்களை உடனடியாக கைது செய்து விசாரணைய ஆணையம் தீவிர விசாரணை செய்ய வேண்டும். அப்போதுதான் உண்மை வெளிவரும்” என அவர் கருத்து தெரிவித்தார்.