Publish Date: Fri, 28 Jul 2017 (10:53 IST)
Updated Date: Fri, 28 Jul 2017 (16:41 IST)
ஆஸ்தான் ஜோதிடரின் அறிவுரையை ஏற்று, பிரசித்தி பெற்ற சேஷபுரீஸ்வரர் கோவிலில் நடந்த குருபெயர்ச்சி பூஜையில் சசிகலாவின் சகோதரர் திவாகரன் கலந்து கொண்டார்.
சசிகலா குடும்பத்திற்கு இது போதாத காலமாகவே இருக்கிறது. சசிகலா சிறையில் இருக்கிறார். மேலும், அவருக்கு சிறப்பு சலுகை அளிக்கப்பட்டதாக ஆதாரத்துடன் புகார் எழுந்துள்ளதால், மன்னார்குடி வட்டாரம் சற்று ஆடிப்போய் இருக்கிறது.
மேலும், சசிகலா குடும்பத்தினர் வசம் இருந்த கட்சியும், ஆட்சியும் தற்போது முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கையில் சென்றுவிட்டது. எனவே, அதை மீட்கும் பொருட்டும், சிறையில் சசிகலா சந்தித்து வரும் பிரச்சனைகளையும் எப்படி தீர்ப்பது என சிந்தனையில் இருந்த திவாகரனிடம், குருபெயர்ச்சி பூஜையில் கலந்து கொள்ளுமாறு அவரின் ஆஸ்தான ஜோதிடர் கூறியதாக தெரிகிறது.
தெய்வ வழிபாடு, பரிகாரம், பூஜை ஆகியவற்றில் மிகுந்த நம்பிக்கை உள்ளவர் சசிகலா. எனவே, திருவாரூர் மாவட்டம் குடவாசல் அருகே உள்ள திருப்பாம்புரத்தில் பிரசித்திபெற்ற சேஷபுரீஸ்வரர் கோவிலில் நேற்று நடைபெற்ற குருபெயர்ச்சி பூஜையில் திவாகரன் கலந்து கொண்டார்.
இதன் மூலம், கட்சியிலும், ஆட்சியிலும் மீண்டும் தான் கால் பதிக்க முடியும் என திவாகரன் தரப்பு நம்புவதாக தெரிகிறது.