Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அனைத்து சாதி அர்ச்சகர்களுக்கு அவமரியாதை - இதுவா திராவிட மாடல் சமூக நீதி.? ராமதாஸ் கண்டனம்..!

Senthil Velan
சனி, 21 செப்டம்பர் 2024 (16:04 IST)
அனைத்து சாதி அர்ச்சகர்களும் அவர்களுக்குரிய உரிமை, மரியாதை ஆகியவற்றுடன் கோயில்களின் கருவறைகளில் பூசை செய்வதை உறுதி செய்ய வேண்டும்  என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கேட்டுக் கொண்டுள்ளார்.
 
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழகத்தில் அனைத்து சாதி அர்ச்சகர் திட்டத்தின்படி, ஆகமக் கோயில்களில் அர்ச்சகர்களாக நியமிக்கப்பட்டவர்களுக்கு இழைக்கப்பட்டு வரும் அநீதியும், அவமரியாதையும் சுட்டிக்காட்டப்பட்ட பிறகும் தொடர்கின்றன. அனைத்து சாதி அர்ச்சகர்களுக்கு இழைக்கப்பட்ட கொடுமைகளை சரி செய்ய வேண்டிய தமிழக அரசு, அனைத்து அவமதிப்புகளையும், அநீதிகளையும் மூடி மறைக்க முயற்சி செய்வது கண்டிக்கத்தக்கதாகும்.
 
தமிழகத்தில் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள ஆகமக் கோயில்களில் அனைத்து சாதி அர்ச்சகர்கள் திட்டத்தின்படி 24 அர்ச்சகர்கள் கடந்த 2021-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 14-ஆம் தேதி நியமிக்கப்பட்டனர். அவர்களில் 10 பேர் தங்களுக்கு பூசை செய்யும் உரிமை வழங்கப்படவில்லை என்றும், பரம்பரை அர்ச்சகர்களால் தொடர்ந்து அவமதிக்கப்பட்டு வருவதாகவும் குற்றஞ்சாட்டியதாக செய்தி வெளியாகியுள்ளது.
 
தைலாபுரத்தில் கடந்த 19-ஆம் தேதி செய்தியாளர்களை சந்தித்தபோது, இதைச் சுட்டிக்காட்டிய நான்,‘‘ இந்தத் திட்டத்தை செயல்படுத்தியதன் மூலம் பெரியாரின் நெஞ்சில் தைத்த முள் அகற்றப்பட்டு விட்டது என்று ஆட்சியாளர்கள் கூறினார்கள். ஆனால், அனைத்து சாதி அர்ச்சகர்கள் அவமானப்படுத்தப்படுவதை வேடிக்கைப் பார்ப்பதன் மூலம் தந்தை பெரியாரின் நெஞ்சில் ஈட்டியை குத்தியிருக்கிறது திராவிட மாடல் அரசு’’ என்று குற்றஞ்சாட்டியிருந்தேன்.

அதன்பிறகாவது அனைத்து சாதி அர்ச்சகர்களுக்கு இழைக்கப்பட்ட அநீதி துடைக்கப்படும் என எதிர்பார்த்தேன். ஆனால், அது நடக்கவில்லை. அனைத்து சாதி அர்ச்சகர்களுக்கு இழைக்கப்படும் கொடுமைகள் இன்றும் தொடர்கின்றன. காவிரி பாசன மாவட்டங்களில் உள்ள பெருமாள் கோயில் ஒன்றில் அர்ச்சகராக நியமிக்கப்பட்ட இடைநிலை சாதியைச் சேர்ந்த ஒருவர், பரம்பரை அர்ச்சகரின் கொடுமையும், அவமதிப்பும் தாங்க முடியாமல் விடுப்பில் செல்வதாகக் கூறி விட்டு, சொந்த ஊருக்கு சென்று விட்டதாக நேர்காணலில் கூறியுள்ளார்.
 
நியமன ஆணை வழங்கப்பட்ட பிறகு முதல் நாள் என்னை பூஜை செய்ய வைத்து படம் பிடித்தனர். அதுதான் நான் முதலும், கடைசியுமாக செய்த பூசை. நான் பூசை செய்தால், அந்த கடவுள் சிலையை தொட மாட்டேன் என்று பரம்பரை அர்ச்சகர் மிரட்டியதால் அறநிலையத் துறை அதிகாரிகள் எதுவும் செய்ய மறுக்கின்றனர் என்று அந்த அர்ச்சகர் கூறியிருக்கிறார்.  இது அவருடைய குமுறல் மட்டுமல்ல. 24 அனைத்து சாதி அர்ச்சகர்களும் இதே நிலையில் தான் வெந்து கொண்டிருக்கின்றனர்.

அனைத்து சாதி அர்ச்சகர்களுக்கு இழைக்கப்பட்ட அநீதி, அவமதிப்புகள் குறித்து செய்திகள் வெளியானதைத் தொடர்ந்து, அதுகுறித்து விசாரணை நடத்த இந்து சமய அறநிலையத் துறை ஆணையர் ஆணையிட்டுள்ளார். இந்த விசாரணை அனைத்து சாதி அர்ச்சகர்களுக்கு விடியலைத் தரும் என்று எதிர்பார்த்தால், ஏமாற்றத்தை மட்டுமே தந்திருக்கிறது. விசாரணை என்ற பெயரில் கோயில்களுக்கு வரும் அதிகாரிகள், அனைத்து சாதி அர்ச்சகர்களை அழைத்து, சிரித்தபடியே போஸ் கொடுக்கும்படி கூறுகின்றனர்.

அவர்களை படம் பிடித்து அவர்கள் மகிழ்ச்சியாக இருப்பதைப் போன்றும், எந்தக் குறையும் இல்லை என்பது போன்றும் தோற்றத்தை ஏற்படுத்த முயல்கின்றனர். ‘‘அரசின் விளம்பரத்திற்காக நாங்கள் பகடைக்காய்களாக்கப் படுகிறோம். நாங்கள் ஏராளமான பிரச்சினைகளை எதிர்கொண்டாலும் அதைப் பற்றி கவலைப்படாத அரசு, அனைத்து சாதி அர்ச்சகர் திட்டம் புரட்சிகரமானது; புகழ்பெற்றது என்ற தோற்றத்தை ஏற்படுத்துவதற்கு தான் முயல்கிறது என்று பாதிக்கப்பட்ட அர்ச்சகர் ஒருவர் கூறியிருப்பதிலிருந்தே அரசின் மோசடியை உணர்ந்து கொள்ளலாம்.
 
அனைத்து சாதி அர்ச்சகர் திட்டம் ஏட்டளவில் புரட்சிகரமான திட்டம் என்பதில் எந்த ஐயமும் இல்லை. ஆனால், அதை அரசு எந்த அளவுக்கு செயல்படுத்துகிறது என்பதைப் பொறுத்து தான் தந்தைப் பெரியாரின் கனவுக்கு அது நியாயம் சேர்க்கிறதா அல்லது துரோகம் செய்கிறதா என்பது உறுதியாகும். முந்தைய திமுக ஆட்சியில் அறிவிக்கப்பட்டு, இப்போதைய திமுக ஆட்சியில் அனைத்து சாதி அர்ச்சகர் திட்டத்தை செயல்படுத்தியதன் மூலம் சமூக நீதியில் பெரும்புரட்சி செய்து விட்டதாக பெருமைப்பட்டுக் கொள்ளும் முதல்வர், இந்தத் திட்டத்தை வெற்றிகரமானதாக மாற்ற இதுவரை எடுத்த நடவடிக்கைகள் என்ன?
 
1. அனைத்து சாதி அர்ச்சகர் திட்டம் எவ்வாறு செயல்படுத்தப்படுகிறது என்பது குறித்து கடந்த 37 மாதங்களில் ஒருமுறையாவது ஆய்வுக் கூட்டத்தை முதல்வர் நடத்தியிருப்பாரா?
 
2. அனைத்து சாதி அர்ச்சகர்கள் திட்டத்தின்படி நியமிக்கப்பட்ட அர்ச்சகர்கள் தங்களுக்கு இழைக்கப்படும் கொடுமைகள், அவமதிப்புகள் குறித்து அளித்த புகார்களின் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்ன?
 
3. அனைத்து சாதி அர்ச்சகர்கள் பூசை செய்த கடவுள் சிலைகளுக்கு நாங்கள் பூசை செய்ய மாட்டோம் என்று பரம்பரை அர்ச்சகர்கள் போர்க்கொடி உயர்த்தினால் அவர்களை இட மாற்றம் செய்து விட்டு, அந்த இடத்தில் பூசை செய்யும் உரிமையை அனைத்து சாதி அர்ச்சகர்களுக்கே வழங்க முடியாதா? அதை செய்ய தமிழக அரசு தயங்குவது ஏன்?
 
4. மதுரை மீனாட்சியம்மன் திருக்கோயில், பழனி தண்டாயுதபாணி திருக்கோயில், திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில், திருவண்ணாமலை அருணாச்சலேசுவரர் திருக்கோயில், திருவரங்கம் அரங்கநாத சுவாமி திருக்கோயில், திருவல்லிக்கேணி பார்த்தசாரதி திருக்கோயில் ஆகிய கோயில்களில் மட்டும் அனைத்து சாதி அர்ச்சகர்களுக்கான பயிற்சிப் பள்ளிகள் நடைபெற்று வந்த நிலையில், திமுக ஆட்சியில் கூடுதலாக திருப்பெரும்புதூர் ஆதிகேசவப் பெருமாள் கோயிலில் தொடங்கப்பட்டதாக திமுக அரசு அறிவித்தது. இந்த 7 பயிற்சிப் பள்ளிகளில் கடந்த 3 ஆண்டுகளில் பயிற்சி பெற்ற அர்ச்சகர்கள் எத்தனை பேர்?
 
5. அவர்களில் எத்தனை பேர் கடந்த மூன்றாண்டுகளில் அர்ச்சகர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்?
 
அனைத்து சாதியினரையும் அர்ச்சகர்கள் ஆக்கி விட்டதாக விளம்பரம் செய்வதால் மட்டுமே சமூக நீதி தழைத்து விடாது, சமத்துவம் மலர்ந்து விடாது. அனைத்து சாதி அர்ச்சகர்களுக்கு உரிய உரிமைகள் அனைத்தும் வழங்கப்பட்டால் தான் உண்மையான சமத்துவம் மலரும். 


ALSO READ: 'வாழு.. வாழ விடு' - இதுல யாரையும் இழுத்துவிடாதீங்க..! விவாகரத்து குறித்து மனம் திறந்த ஜெயம் ரவி..!!


எனவே, இந்த விவகாரத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலையிட்டு, அனைத்து சாதி அர்ச்சகர்களும் அவர்களுக்குரிய உரிமை, மரியாதை ஆகியவற்றுடன் கோயில்களின் கருவறைகளில் பூசை செய்வதை உறுதி செய்ய வேண்டும் என்று ராமதாஸ் வலியுறுத்தி உள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டம் ஆபத்தானது.! இந்தியாவிற்கு தேவைப்படாது - கமல்..!!

சர்வதேச கடற்கரை தூய்மை தினத்தை மாணவர்களுடன் இணைந்து துணை நிலை ஆளுநர் கைலாஷ்நாதன் தூய்மைப் பணியை மேற்கொண்டார்!

சென்னை கடற்கரை - தாம்பரம் மின்சார ரயில் சேவை நாளை ரத்து.. என்ன காரணம்?

மக்கள் நீதி மய்யம் நிரந்தர தலைவராக கமல்ஹாசன் தேர்வு.. பொதுக்குழுவில் தீர்மானம்..!

சட்டப் பல்கலை பட்டமளிப்பு விழா தேதி அறிவிப்பு.. முன்பதிவு செய்ய வேண்டிய இணையதளம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments