Publish Date: Sat, 21 Oct 2017 (12:25 IST)
Updated Date: Sat, 21 Oct 2017 (12:57 IST)
மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் மரணம் குறித்து குழப்பத்தை ஏற்படுத்தும் விதமாக மாறி மாறி கருத்து தெரிவித்து வருகிறார் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன்.
செப்.22ம் தேதி இரவு மருத்துவமனையில் ஜெயலலிதா அனுமதிக்கப்பட்டது முதல், டிசம்பர் 5ம் தேதி மரணம் அடைந்தவரை அனைத்திலுமே மர்மமே நீடிக்கிறது.
ஜெயலலிதா அப்பல்லோ மருத்துவமனயில் சிகிச்சை பெற்றபோது அம்மா இட்லி சாப்பிடுகிறார், இடியாப்பம் சாப்பிடுகிறார் டிவி பார்க்கின்றார் என்று சி.ஆர்.சரஸ்வதி போன்றோர் கூறினர்.
ஆனால், மதுரையில் நடந்த கூட்டம் ஒன்றில் பேசிய அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன், 'மக்களிடம் இப்போது ஒரு விஷயத்திற்காக மன்னிப்பு கேட்டுக்கொள்கிறோம். ஜெயலலிதாவை நாங்கள் யாரும் மருத்துவமனையில் சந்திக்கவே இல்லை. எங்களை சந்திக்கவிடாமல் செய்த மர்மம் என்ன எனத்தெரியவில்லை. சசிகலா தரப்பு என்ன கூறியதோ அதைத்தான் நாங்கள் வெளியில் கூறினோம். அனைத்தும் விசாரணை கமிஷனில் தெரியவரும்” என அவர் கூறியிருந்தார்.
அதன் மூலம் ஓபிஎஸ், ஈபிஎஸ் உள்பட அனைவருமே அந்த சமயத்தில் பொய்தான் பேசியுள்ளனர் என்பது தெரிய வந்ததால் பொதுமக்கள் அதிர்ச்சியடைந்தனர். மேலும், சீனிவாசனின் வாக்குமூலம் பல விவாதங்களை எழுப்பியது. அதைத் தொடர்ந்து ஜெ.வின் மரணம் குறித்து விசாரிக்க ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் விசாரணைக் கமிஷனும் அமைக்கப்பட்டுள்ளது. அந்த விசாரணை வருகிற டிசம்பர் 25ம் தேதி தொடங்குகிறது.
இந்நிலையில், சமீபத்தில் நேற்று பழனியில் நடைபெற்ற ஒரு பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய திண்டுக்கல் சீனிவாசன், ஜெயலலிதா தொற்று நோய் காரணமாகவே மரணமடைந்தார் எனப் பேசியுள்ளார்.
இப்படி மாறி மாறி அவர் பேசி வருவது அதிமுக தொண்டர்களை குழப்பத்திலும், அதிர்ச்சியிலும் ஆழ்த்தியிருக்கிறது.