Publish Date: Wed, 26 Sep 2018 (10:54 IST)
Updated Date: Wed, 26 Sep 2018 (10:58 IST)
கடந்த சில நாட்களாகவே அதிமுக அமைச்சர்களும் டிடிவி தினகரனும் சொற்போரில் ஈடுபட்டு வருவதால் தமிழக அரசியலில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. விரைவில் வெளிவரவுள்ள 18 எம்.எல்.ஏக்கள் வழக்கின் தீர்ப்பு இந்த பரபரப்பை முடிவுக்கு கொண்டு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில் தொடர்ந்து தினகரனை விமர்சனம் செய்து கொண்டிருக்கும் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்திற்கு அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் துணை பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் இன்று பதிலடி கொடுத்துள்ளார்.
ஜெயலலிதா இருந்த வரை பணிவுடனிருந்த துணை முதல்வர் பன்னீர்செல்வம், இன்று பசுந்தோல் போர்த்திய புலியாக மாறி உள்ளதாகவும், மத்திய அரசுக்கு பயந்து கொண்டு, தமிழக அமைச்சர்கள் சசிகலாவையும், தன்னையும் யார் என கேள்வி கேட்பதாகவும் தினகரன் கூறியுள்ளார்.
ஜெயலலிதா மறைந்த அன்று சசிகலா நினைத்திருந்தால் அவரோ அல்லது நானோ முதல்வராகியிருக்க முடியும். ஆனால் முதல்வர் பதவிக்கு பன்னீர்செல்வத்தை தேர்வு செய்தது சசிகலாதான் என்றும் தினகரன் கூறியுள்ளார்.