Publish Date: Mon, 02 Jul 2018 (17:42 IST)
Updated Date: Mon, 02 Jul 2018 (17:48 IST)
தூத்துக்குடி ஆட்சியர் அலுவலகத்தில் இருந்த ஊழியர்களை காப்பாற்றவே துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது என டிஜிபி டி.கே.ராஜேந்திரன் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக மக்கள் நடத்திய போராட்டத்தில் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டதில் அப்பாவி பொதுமக்கள் 13 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவம் நாடெங்கும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்த விவகாரம் தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. மேலும், இந்த வழக்கை சிபிஐ விசாரிக்க உத்தரவிட வேண்டும் எனவும் கோரிக்கை வைக்கப்பட்டது. இந்த வழக்கை இன்று விசாரித்த தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு குறித்து ஏன் சிபிஐ விசாரிக்கக் கூடாது என கேள்வி எழுப்பியிருந்தார்.
இந்நிலையில் நீதிமன்றத்தில் இதுகுறித்து விளக்கம் அளித்த தமிழக காவல்துறை டிஜிபி ராஜேந்திரன் அளித்த விளக்கத்தில் “தூத்துக்குடி ஆட்சியர் அலுவலகத்தின் 277 ஊழியர்களை மீட்கவே துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது. அதேபோல், ஸ்டெர்லைட் குடியிருப்பில் இருந்த 150 குடும்பத்தினருக்கு ஆபத்தான நிலை ஏற்பட்டதாலும் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது. இது தொடர்பான சிபிசிஐடி விசாரணை நியாயமான முறையில் நடைபெற்று வருகிறது. எனவே, சிபிஐ விசாரணை தேவையில்லை” என அவர் விளக்கம் அளித்துள்ளார்.