Publish Date: Thu, 22 Oct 2020 (10:04 IST)
Updated Date: Thu, 22 Oct 2020 (10:05 IST)
தமிழகத்தில் கொரோனாவோடு டெங்குவும் பரவ அதிக வாய்ப்புள்ளதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தமிழகம் முழுவதும் கொரோனா காரணமாக கடந்த மார்ச் மாதம் முதலாக கடுமையான ஊரடங்கு பின்பற்றப்பட்டு வந்தது. இந்நிலையில் கடந்த சில மாதங்களாக ஊரடங்கில் தளர்வுகள் அளிக்கப்பட்டு வருகின்றது. ஆனாலும் தமிழகத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது.
கடந்த ஆண்டுகளில் தமிழகத்தில் பருவமழை காலங்களில் மலேரியா மற்றும் டெங்கு காய்ச்சலால் பலர் பாதிக்கப்பட்டனர். எனவே தற்போது தமிழகத்தில் பருவமழை தொடங்க உள்ளது மேலும் சிக்கலை ஏற்படுத்தலாம் என மருத்துவ நிபுணர்கள் முன்னரே எச்சரித்தனர்.
இந்நிலையில், தமிழக சுகாதாரத்துறை முதன்மைச் செயலாளர் ராதாகிருஷ்ணன், தமிழகத்தில் கடந்த ஆண்டு 8,000 பேர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருந்தனர். ஆனால் இந்த ஆண்டு 1,800 பேர் மட்டுமே டெங்குவால் பாதிக்கப்பட்டிருக்கின்றனர்.
அந்த வகையில் இந்த ஆண்டு மழைக்கால தொற்று நோய்கள் பாதிப்பு வெகுவாக குறைந்துள்ளது என்று கூறினார். இருப்பினும் வடகிழக்கு பருவமழை இனிமேல்தான் தொடங்கவுள்ள நிலையில் டெங்கு காய்ச்சல் மேலும் பரவ வாய்ப்புள்ளதால் மக்கள் கவனத்துடன் இருக்குமாறு கேட்டுக்கொண்டுள்ளார்.