தீபா எம்எல்ஏ ஆனதும் நேரா முதல்வர் பதவி தான்: திருவாய் மலர்ந்த மாதவன்!
தீபா எம்எல்ஏ ஆனதும் நேரா முதல்வர் பதவி தான்: திருவாய் மலர்ந்த மாதவன்!
Publish Date: Mon, 03 Apr 2017 (13:13 IST)
Updated Date: Mon, 03 Apr 2017 (13:16 IST)
ஆர்கே நகர் தேர்தலில் களம் இறங்கியுள்ள முக்கியமான வேட்பாளர்களில் ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபாவும் ஒருவர். இவரால் வெற்றி பெற முடியாவிட்டாலும், இவருக்கு என்று குறிப்பிட்ட சதவீத மக்களின் ஆதரவும் உள்ளது.
தினகரன், மதுசூதனனின் போட்டிக்கு முன்னால் தீபாவுக்கு இருந்த ஆதரவு அப்படியே குறைய தொடங்கியது. மேலும் தீபாவின் கணவர் மாதவனின் செயல்பாடுகள், கருத்து வேறுபாடுகள், புதிய கட்சி தொடங்கப்போவதாக அறிவிப்பு என ஏகப்பட்ட குழப்பங்கள் தீபாவை சுற்றி உள்ளதால் அவரது ஆதரவு வெகுவாக குறைந்துள்ளது.
இந்நிலையில் ஆர்கே நகர் தேர்தலில் படகு சின்னத்தின் போட்டியிடும் தீபாவுக்கு அவரது கணவர் இன்று முதல் பிரச்சாரம் செய்ய இருப்பதாக கூறியுள்ளார். இது குறித்து கூறிய அவர் தீபா ஐம்பது ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவார் என தெரிவித்தார்.
மேலும், தீபா வெற்றி பெற்றதும் தமிழகத்தில் உள்ள எம்எல்ஏக்கள் தீபாவின் பக்கம் வருவார்கள். பின்னர் அவர்களது ஆதரவுடன் தீபா முதல்வராக பதவியேற்பார் என மாதவன் நம்பிக்கை தெரிவித்தார்.
தனது புதிய கட்சியின் பெயர் விரைவில் அறிவிக்கப்படும் எனவும், சசிகலா தலைமையை விரும்பாத அதிமுகவினர் தங்கள் கட்சியில் சேரலாம் என மாதவன் குறிப்பிட்டார்.