Publish Date: Wed, 19 Sep 2018 (15:44 IST)
Updated Date: Wed, 19 Sep 2018 (16:00 IST)
எம்.ஜி.ஆர் அம்மா தீபா பேரவையிலிருந்து டிரைவர் ராஜா அதிரடியாக நீக்கப்பட்டுள்ளார்.
ஜெ.வின் மறைவிற்கு பின் புதிய அரசியல் கட்சியை தொடங்கிய ஜெ.வின் அண்னன் மகள் தீபா, அதற்கு எம்.ஜி.ஆர் அம்மா தீபா பேரவை என பெயர் வைத்தார். தொடக்கத்தில் பரபரப்பாக வலம் வந்த தீபா அதன்பின் அமைதியாகிப் போனார். அதோடு, தீபாவுடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டு அவரை பிரிந்த அவரின் கணவர் மாதவன் எம்.ஜி.ஆர் ஜெயலலிதா திமுக என்கிற கட்சியை தொடங்கி அதிர வைத்தார்.
அதேபோல், டிரைவர் ராஜா என்பவர் எப்போதும் தீபாவுடனே வலம் வந்தார். அவர் மேல் மோசடி புகார்கள் கொடுக்கப்பட்டது. எனவே, கடந்த ஜனவரி மாதம் அவரை கட்சியிலிருந்து தீபா நீக்கினார். அதன்பின்பு மீண்டும் அவர் கட்சியில் இணைக்கப்பட்டார்.
இந்நிலையில், இன்று மீண்டும் ராஜாவை கட்சியிலிருந்து தீபா நீக்கி உத்தரவிட்டுள்ளார். பேரவையின் கொள்கைக்கும், கோட்பாடுகளுக்கும், விதிகளுக்கும் மாறாக, தொடர்ந்து கழகத்திற்கு களங்கத்தை விளைவிக்கும் வகையில் ஈடுபட்டு வருவதால் அவரை கட்சியிலிருந்து நீக்கியிருப்பதாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து, ஐய்யோ! இவரும் புது கட்சி தொடங்குவாரா? என சமூக வலைத்தளங்களில் பலரும் கிண்டலடித்து வருகின்றனர்.