Publish Date: Fri, 29 Dec 2017 (12:36 IST)
Updated Date: Fri, 29 Dec 2017 (12:38 IST)
தன்னுடைய ஆட்களை வைத்து பொருட்களை உடைத்துவிட்டு, தன்னுடைய வீடு தாக்கப்பட்டதாக தீபா பொய் புகார் கொடுத்ததாக செய்தி வெளிவந்துள்ளது.
கடந்த 25ம் தேதி நள்ளிரவு, மூன்று ஆட்டோக்களில் வந்த 15 பேர் எம்ஜிஆர் அம்மா தீபா பேரவை அலுவலகத்தின் மீது கற்களை வீசி தாக்குதல் நடத்தியதாகவும், அங்கிருந்த காவலாளியையும் தாக்கியதாகவும், தீபா சார்பில் தேனாம்பேட்டை காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த விவகாரத்தில் தீபா பேரவை நிர்வாகி ராமச்சந்திரன் என்பவரே காரணம் என தீபா தரப்பில் கூறப்பட்டது.
எனவே, ராமச்சந்திரனிடம் போலீசார் விசாரணை செய்தனர். அதில், தீபா பேரவை தொடங்கிய போது அவரின் பணம் கொடுத்ததாகவும், தற்போது அந்த பணத்தை திரும்ப கேட்டதால் தன்மீது பொய்யாக புகார் அளித்துள்ளார் எனவும் கூறிய ராமச்சந்திரன் அதற்கான ஆதாரங்களையும் போலீசாரிடம் கொடுத்துள்ளார்.
இதையடுத்து அந்தப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை போலீசார் ஆய்வு செய்தனர். அதில், தீபா வீட்டில் இருந்த கேமராக்கள் மாலை 7 மணி முதல் அடுத்த நாள் காலை 6 மணி வரை அணைத்து வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதனால், சந்தேகமடைந்த போலீசார், தீபாவின் வீட்டின் அருகே உள்ள வீடுகளில் இருந்த கேமரா பதிவுகளை போலீசார் ஆய்வு செய்தனர்.
அதில், இரவு 11 மணியளவில் தனது அலுவலகத்தின் வெளியே இருக்கும் தீபா உத்தரவிட அவரது பாதுகாவலர்கள் நாற்காலிகள் உள்ளிட்ட பொருட்களை தூக்கி போட்டு உடைப்பது பதிவாகியுள்ளது. எனவே, அவரது பாதுகாவலர்கள் 3 பேரையும் போலீசார் கைது செய்துள்ளனர். மேலும், இது தொடர்பாக தீபாவிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது எனக் கூறப்படுகிறது.