எனது தொண்டர்களை ஓபிஎஸ் இழுத்துவிட்டார்: தீபா குற்றச்சாட்டு
Publish Date: Mon, 09 Jul 2018 (08:15 IST)
Updated Date: Mon, 09 Jul 2018 (08:17 IST)
என் பக்கம் இருந்த அதிமுக தொண்டர்களை ஓ.பன்னீர்செல்வம் தனது பக்கம் இழுத்துவிட்டதாக செய்தியாளர்களை சந்தித்த தீபா குற்றஞ்சாட்டியுள்ளார்.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் அண்ணன் மகளும், எம்.ஜி.ஆர். அம்மா தீபா பேரவை தலைவியுமான தீபா, எம்.ஜி.ஆர். அம்மா தீபா பேரவை நிர்வாகி ஒருவரின் திருமண விழாவில் கலந்து கொள்ள திருச்சி வந்திருந்தபோது பத்திரிகையாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:
ஓ.பன்னீர்செல்வம் அவர்களை நான் சந்தித்துப் பேசியது மரியாதை நிமித்தமாக நடந்தது. அதன்பிறகு என்ன காரணத்தாலோ எனது பக்கம் வந்த அ.தி.மு.க. தொண்டர்களை எல்லாம் அவர் பக்கம் இழுத்துக்கொண்டார். ஒருவகையில் என்னை ஏமாற்றிவிட்டார் என்றுதான் சொல்ல வேண்டும்.
'ரஜினி, கமல் தனித்தனியாக கட்சி தொடங்கி உள்ளனர். தேர்தல் வந்தால்தான் அவர்களை மக்கள் ஏற்றுகொண்டார்களா? என்பது தெரிய வரும்.
தமிழகத்தில் இந்த ஆட்சி 5 ஆண்டுகள் தொடர்ந்தால் மக்கள் பெரிதும் பாதிக்கப்படுவார்கள். எனவே, இந்த ஆட்சி உடனே கலைக்கப்பட வேண்டும். நாடாளுமன்றத்துக்கும், சட்டமன்றத்துக்கும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவது சாத்தியமில்லை. அவ்வாறு நடந்தால் அது சர்வாதிகார ஆட்சியாகதான் இருக்கும்.
தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம் மட்டுமல்ல. தமிழகத்தில் அனைத்து சம்பவங்களுமே மக்களை அடிமைப்படுத்துவதுபோல் நடந்து வருகிறது. ஜல்லிக்கட்டுப் போராட்டத்துக்குப் பிறகு, அரசுகளால் தீட்டப்படும் திட்டங்கள் அனைத்துமே மக்கள் விரோத திட்டங்களாக தான் இருக்கிறது.
இவ்வாறு தீபா கூறியுள்ளார்.
அடுத்த கட்டுரையில்