Publish Date: Wed, 05 Aug 2020 (14:30 IST)
Updated Date: Wed, 05 Aug 2020 (14:31 IST)
கொரோனா பாதிப்பு மற்றும் உயிரிழப்புகளை அதிமுக அரசு முழுமையாக வெளியிடவில்லை என்ற திமுகவின் மனு மீதான விசாரணையில் நீதிபதிகள் முக்கிய உத்தரவு பிறப்பித்துள்ளனர்.
கொரொனா காரணமாக தமிழகத்தில் நாளுக்கு நாள் பலி எண்ணிக்கையும் பாதிப்பு எண்ணிக்கையும் அதிகமாகி கொண்டே வருகிறது. ஆனால் இந்த புள்ளி விவரங்களை அறிவிப்பதில் அதிமுக அரசு உண்மையாகவும் வெளிப்படையாகவும் செயல்படவில்லை என திமுக ஆரம்பம் முதலே குற்றம் சாட்டி வருகிறது.
இந்நிலையில் அக்கட்சியைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர் பழனிவேல் ராஜன் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்து அதிமுக வெளிப்படையான உண்மையான புள்ளி விவரங்களை அறிவித்தால்தான் மக்கள் விழிப்புணர்வோடு செயல்படுவார்கள் என்று கூறியிருந்தார். இந்த வழக்கில் ஆஜரான அரசு தரப்பு வழக்கறிஞர் ‘அரசு வெளிப்படைத்தன்மையுடன்தான் வெளியிட்டு வருகிறது. மனுதாரர் திமுக சட்டமன்ற உறுப்பினர் என்பதால், அரசின் மீது பொய் குற்றச்சாட்டுகளை முன்வைக்கிறார்’ என வாதிட்டார். இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள் மூன்று வாரங்களுக்குள் பதிலளிக்குமாறும் அரசுக்கு உத்தரவிட்டுள்ளார்.