Publish Date: Sun, 30 Sep 2018 (11:13 IST)
Updated Date: Sun, 30 Sep 2018 (11:16 IST)
எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவையொட்டி சென்னையில் பல்வேறு இடங்களில் அனுமதியின்றி வைக்கப்பட்டுள்ள பேனர்களை அகற்ற வேண்டும் என உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவிட்டுள்ளது.
இன்று எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழா நந்தனம் பகுதியில் உள்ள ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் நடக்கிறது. இதனால், கிரீன்வேஸ், நந்தனம் சாலை உள்ளிட்ட சென்னையின் பல இடங்களில், சாலைகளை மறித்து, சாலைகளை சேதப்படுத்தியும் ஆயிரக்கணக்கான பேனர்கள் வைக்கப்பட்டுள்ளது.
சாலைகளில் பேனர் வைப்பது தொடர்பாக ஏற்கனவே சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து, நிதிமன்றமும் சில வழிகாட்டுதலையும், பேனர் வைக்க அனுமதி வழங்கும்போது கடைபிடிக்கப்படும் சட்டவிதிகள் பற்றியும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
ஆனால், அதை மதிக்காமல் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அரசு சென்னையின் பல்வேறு இடங்களிலும் பேனர்களை வைத்துள்ளது என டிராபிக் ராமசாமி நேற்று மீண்டும் ஒரு மனுவை தாக்கல் செய்தார்.
அந்த மனு இன்று விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கில் தீர்ப்பளித்த நீதிபதிகள், சென்னையில் எம்.ஜி.ஆர் நூற்றாண்டு நிறைவு விழாவுக்கு அனுமதியின்றி வைக்கப்பட்டுள்ள பேனர்களை அகற்ற வேண்டும் என சென்னை மாநகராட்சி மற்றும் காவல் துறையினருக்கு உத்தரவிட்டனர். மேலும், இது தொடர்பாக அக்டோபர் 8ம் தேதி அறிக்கை தாக்கல் செய்யுமாறு தமிழக அரசுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.