Publish Date: Thu, 23 Jan 2020 (08:11 IST)
Updated Date: Thu, 23 Jan 2020 (08:12 IST)
கிராமசபைக் கூட்டங்களில் தீர்மானம் நிறைவேற்றினால் அதன் கட்டுப்பாட்டுக்குள் இருக்கும் டாஸ்மாக் கடைகளை மூடவேண்டும் என்பது தொடர்பான வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடுக்கப்பட்டுள்ளது.
தமிழக அரசு டாஸ்மாக் கடைகளின் மூலம் மிகப்பெரிய வருவாயை ஈட்டி வருகிறது. ஆனால் அதில் விற்கப்படும் சரக்குகளில் மிகக்குறைந்த தரத்தைக் கூட கடைபிடிக்கப் படுவதில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதனால் குடிப்பவர்கள் போதைப் பழக்கத்துக்கு அடிமை ஆவது மட்டுமில்லாமல் அவர்கள் உயிருக்கும் ஆபத்து ஏற்படுகிறது.
இது சம்மந்தமான வழக்கு ஒன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடுக்கப்பட்டது. கிராமப் பஞ்சாயத்துகளில் உள்ள டாஸ்மாக் கடைகளை மூட கிராம சபைக் கூட்டத்தில் ஆலோசனை நிறைவேற்றினால் அவற்றை மூட உத்தரவிடவேண்டும் என அந்த வழக்கில் கோரப்பட்டது.
இந்த வழக்கின் இடைக்காலத் தீர்ப்பை வாசித்த நீதிபதிகள் ‘மக்களின் ஆரோக்கியம் சார்ந்த நலனையும் எண்ணி அரசு செயல்படவேண்டும். ஒரு இடத்தில் இருக்கும் டாஸ்மாக் கடைகளை மூடலாமா? வேண்டாமா? என்ற அதிகாரத்தை கிராம சபைக் கூட்டம் போன்றவற்றுக்கு வழங்குவது குறித்து சட்டத்திருத்தம் கொண்டு வரக் கூடாதா?.’ இதைப்பற்றி அதிகாரிகள் விரைவில் அறிக்கைத் தாக்கல் செய்ய வேண்டுமென உத்தரவு பிறப்பித்துள்ளது.
நீதிமன்றத்தின் இந்த நிலைப்பாட்டுக்கு விஜயகாந்த் உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் ஆதரவு தெரிவித்துள்ளனர்.