Publish Date: Sat, 17 Oct 2020 (08:35 IST)
Updated Date: Sat, 17 Oct 2020 (08:38 IST)
சென்னை மாநகராட்சி கமிஷனர் கோ.பிரகாஷ் நவம்பர், டிசம்பர் மாதத்தில் தொற்று அதிகரிக்க அதிக வாய்ப்பு உள்ளதாக எச்சரித்துள்ளார்.
தமிழகத்தில் தினந்தோறும் கொரோனா பாதிப்பு குறித்த தகவல்களை தெரிவித்து வரும் தமிழக சுகாதாரத்துறை தமிழகத்தில் 4389 பேர்களுக்கு புதிதாக கொரோனா தொற்று பரவி இருப்பதாக அறிவித்துள்ளது. இந்த நிலையில் தமிழகத்தில் கொரோனா பாதிப்பு உள்ளவர்களின் மொத்த எண்ணிக்கை 679,191 ஆக உயர்ந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் கொரோனாவால் பாதிப்பு அடைந்த 4389 பேர்களில் 1140 பேர்கள் சென்னையை சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. தமிழகத்தில் கொரோனாவுக்கு 57 பேர் பலியாகியுள்ளதை அடுத்து தமிழகத்தில் பலி எண்ணிக்கை 10529 ஆக உயர்ந்துள்ளது என்றும் சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.
தமிழகத்தில் இன்று 5245 பேர் கொரோனாவில் இருந்து குணமாகியுள்ளனர். இதனையடுத்து தமிழகத்தில் குணமானோர் எண்ணிக்கை 627,703 ஆக உயர்ந்துள்ளது. இந்நிலையில் சென்னை மாநகராட்சி கமிஷனர் கோ.பிரகாஷ் நவம்பர், டிசம்பர் மாதத்தில் தொற்று அதிகரிக்க அதிக வாய்ப்பு உள்ளதாக எச்சரித்துள்ளார்.
அவர் கூறியதாவது, நவம்பர், டிசம்பர் மாதம் தீபாவளி உள்ளிட்ட பண்டிகை காலம் நிரம்பியது. இதனால் பொதுமக்கள் அதிகம் கூடும் சூழ்நிலை ஏற்படுவதால், கொரோனா தொற்று பரவல் அதிகமாக இருக்கும். மேலும் இந்த மாதங்களில் மழை பொழிவும், குளிர் காலமும் அதிகம் இருப்பதால் தொற்று பரவல் அதிகம் இருக்க வாய்ப்பு இருக்கிறது. இதனால் பாதுகாப்பாக இருக்க வேண்டியது அனைவரின் கடமை என எச்சரித்துள்ளார்.