தமிழக அரசு இன்று பட்ஜெட்டை தாக்கல் செய்ய இருக்கும் நிலையில், நேற்று திடீரென இந்திய அரசால் வெளியிடப்பட்ட "₹" என்ற சின்னத்திற்கு பதிலாக "ரூ" என மாற்றி பயன்படுத்தப்பட இருப்பதாக கூறியுள்ளது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
தமிழுக்கு முக்கியத்துவம் அளிக்கும் விதமாக இந்த மாற்றம் செய்யப்பட்டுள்ளது என தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது. இந்த மாற்றத்துக்கு எதிராக ஏற்கனவே அண்ணாமலை தனது கண்டனத்தை தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில், மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இது குறித்து பேசும் போது, "தமிழ்நாடு பட்ஜெட் ஆவணங்களில் இருந்து அதிகாரப்பூர்வ சின்னமான ₹ என்பதை நீக்கி 'ரூ' என திமுக அறிவித்துள்ளது. திமுகவுக்கு உண்மையில் இந்த சின்னத்தில் பிரச்சினை என்றால், 2010 ஆம் ஆண்டு காங்கிரஸ் தலைமையிலான அரசு இந்த சின்னத்தை அறிவிக்கும் போது ஏன் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை?" என்று கேள்வி எழுப்பினார்.
மேலும், திமுக முன்னாள் எம்எல்ஏ தர்மலிங்கத்தின் மகன் உதயகுமார் வடிவமைத்த சின்னத்தையே திமுக அரசு புறக்கணிக்கிறது. இது தமிழக இளைஞரின் படைப்பையும் புறக்கணிப்பதாக அர்த்தம் என்றும் அவர் கூறினார்.
அத்துடன், "ரூபாய்" என்ற வார்த்தை சமஸ்கிருதத்துடன் தொடர்புடையது என்றும் அவர் தெரிவித்தார். அவரது இந்த கருத்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.