Publish Date: Fri, 08 Jan 2021 (18:15 IST)
Updated Date: Fri, 08 Jan 2021 (18:17 IST)
கம்பி மற்றும் சிமெண்டை அத்தியாவசிய பொருட்களாக அறிவித்து விலை உயர்வை தடுக்க வேண்டும் என மத்திய மாநில அரசுகளுக்கு கட்டுமான சங்கத்தினர் கோரிக்கை.
அகில இந்திய கட்டுமான சங்கத்தின் சார்பில் செய்தியாளர் சந்திப்பு நடைபெற்றது. இதில் பேசிய தமிழ்நாடு கட்டுமான சங்கத்தின் தலைவர் ஆர்.பிரகாஷ், கம்பியின் விலை 80%, சிமெண்ட் விலை 50% உயர்த்தப்படுவதால் கட்டுமான பணிகள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக பாலங்கள், தேசிய நெடுஞ்சாலைகள், இரயில்வே வளர்ச்சிப்பணிகள், துறைமுக கட்டுமானங்கள், விமான தளங்களிம் கட்டுமானங்கள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. தொழிலாளர்கள் நலன் மற்றும் நாட்டின் வளர்ச்சி கருதி கம்பி மற்றும் சிமெண்டை அத்தியாவசிய பொருட்களாக அறிவித்து விலை உயர்வை தடுக்க வேண்டும் என மத்திய மாநில அரசுகளுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.
மேலும் தமிழகத்தில் பத்திரப்பதிவு கட்டணத்தை குறைக்க வேண்டும். மத்திய, மாநில அரசுப்பணி ஒப்பந்ததாரர்களுக்கு வழங்கபட வேண்டிய பட்டியல் தொகைகள் 6 மாதங்களாக வழங்கப்படாமல் நிலைவையில் உள்ளதாகவும் உடனடியாக வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினார்.
மேலும் மின் இணைப்பிற்கு 5 லட்சம் செலுத்த வேண்டும் என்ற அரசின் அறிவிப்பு கட்டுமான துறையை நசுக்கும் விதமாக உள்ளதாக குற்றஞ்சாட்டிய அவர் பழைய முறையையே பின்பற்ற வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார். கோரிக்கைகளை அரசு நிறைவேற்றாவிட்டால் அடுத்தகட்டமாக தொடர் போராட்டத்தில் ஈடுபடுவோம் என அவர் தெரிவித்துள்ளார்.