Publish Date: Mon, 20 Aug 2018 (14:16 IST)
Updated Date: Mon, 20 Aug 2018 (14:20 IST)
காவல்துறையில் பணியாற்றும் உயர் போலீஸ் அதிகாரியான ஐ.ஜி .மீது பெண் காவலர் ஒருவர் பாலியல் புகார் கூறியிருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை லஞ்ச ஒழிப்புதுறையில் இயக்குனருக்கு அடுத்த பதவியில் இருக்கும் உயர் போலீஸ் அதிகாரி, அவருக்கு கீழ் பணி புரியும் பெண் எஸ்.பிக்கு தொடர்ந்து பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளார். இதுபற்றி அந்த பெண் அதிகாரி லஞ்ச ஒழிப்புதுறை இயக்குனர் ஜெயந்த் முரளியிடம் புகார் கொடுத்தார். ஆனாலும், அவர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
அதோடு, அந்த அதிகாரியின் பாலியல் தொல்லை நாளுக்கு நாள் அதிகரித்து வந்துள்ளது. இதனால், அந்த பெண் அதிகாரி டிஜிபி மற்றும் உள்துறை செயலாளரிடம் சில நாட்களுக்கு முன்பு புகார் அளித்தார். ஆனால், அப்போதும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
இதனால், அந்த பெண் அதிகாரி முதல்வரின் செயலாளர், டிஜிபி மற்றும் உள்துறை செயலாளர் நிரஞ்சன் மார்டி ஆகியோரிடம் நேற்று முன் தினம் புகார் அளித்தார். எனவே, அவர் ஏற்கனவே அளித்த புகாரின் அடிப்படையில் என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என முதல்வர் மற்றும் டிஜிபி தரப்பில் விளக்கம் கேட்கப்பட்டது.
இதையடுத்து, பெண் போலீஸ் அதிகாரி சீமா அகர்வால் தலைமையில் தற்போது விசாரணை கமிட்டி அமைக்கப்பட்டுள்ளது. இந்த கமிட்டி கொடுக்கும் அறிக்கையின் அடிப்படையில், உயர் அதிகாரி மீது நடவடிக்கை பாயும் என எதிர்பார்க்கப்படுகிறது.